தமிழக விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் விபரீத முயற்சி.! கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்
சென்னை: மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு அடம் பிடிப்பது, கடும் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் பிடிவாதத்திற்கு, மத்திய பாஜக அரசு திரைமறைவில் ஆதரவுக்கரம் நீட்டி வருவது கடும் கண்டனத்திற்குரியது என ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்டாலின், மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகி அதிமுக அரசு உடனே அணை கட்ட தடை பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படியும், காவிரி தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படியும் தமிழகத்திற்கு தருகின்ற காவிரி நீரை குறைக்கும் வகையில், எந்த அணைகளையும் கர்நாடகம் புதிதாக கட்ட கூடாது என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மேகதாது அணை கட்டுவதுதொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்த போது தமிழகம் கடுமையாக எதிர்த்தது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சரான சதானந்த கவுடா, மேகதாது அணை கட்ட அனுமதி பெற்ற தர தயார் என கூறி தன்னிச்சையாக பேட்டி கொடுத்தார்.
இவ்வாறு பேட்டியளித்ததன் மூலம் அவர் அனைத்து மாநிலங்களுக்குமான அமைச்சர் அல்ல என்பதை வெட்ட வெளிச்சமாக்கினார்.
தற்போது கர்நாடக அரசின் சார்பில் மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க கோரி, கர்நாடகம் கடிதம் எழுதியிருப்பது இருமாநில நல்லுறவுக்கு எந்த வகையிலும் உதவிடாத சட்டவிரோத செயலாகவே திமுக பார்ப்பதாக கூறியுள்ளார். காவிரி இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட வேண்டிய கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டினால் தான் தண்ணீர் திறக்க முடியும் என கூறுவது வேடிக்கையானது மட்டுமல்ல, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் விளையாடும் விபரீத முயற்சி என கடுமையாக சாடியுள்ளார்.
எனவே கர்நாடக அரசின் கோரிக்கைக்கு அனுமதி அளிக்க முடியாது என மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நீரை திறக்காமல், அராஜக மனப்பான்மையுடன் கர்நாடக அரசு செயல்படுவது அரசியல் சட்டத்தையும் உச்சநீதிமன்ற தீர்ப்பையும் துச்சமென மதிக்கும் செயல்.
இரு மாநில உறவுகளை பாதிக்கும் இது போன்ற போக்கையும், முரண்பட்ட செயல்களையும் கர்நாடகம் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.