பிரதமர் மோடி சொன்ன 15 லட்சம் வந்திருச்சு.. தமிழ்நாட்டில் புதுசா முளைத்த மோசடி.. போலீஸ் வார்னிங்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி சொன்ன ரூ.15 லட்சம் பணம் வந்திருப்பதாகக் கூறி வங்கி கணக்குகளில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் தமிழகத்தில் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
படித்தவர்கள், படிக்காதவர்கள் என பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் ஆன்லைனில் பணமோசடி செய்யும் கும்பல்கள் அதிகரித்து வருகின்றன. வங்கி கணக்கில் உள்ள பணத்தை கொள்ளையடிப்பதற்காக அவர்களுக்கு லாட்டரியில் பரிசு விழுந்ததாக கூறுவது. உங்கள் மொபைல் எண்ணிற்கு பல லட்சம் டாலர் பரிசு விழுந்ததாக கூறுவது போன்ற செயல்களை செய்து வங்கி கணக்கிற்கு பணத்தை போட சொல்லி அபேஸ் செய்து வந்த கும்பல்கள் தற்போது அதைவிட தொழில்நுட்ப ரீதியாக திருடவும் தொடங்கிவிட்டார்கள்.
உங்கள் வங்கி கணக்கு எண் கொடுங்கள், உங்கள் ஓடிபி சொல்லுங்கள் உங்களுக்கு இவ்வளவு பணம் அனுப்பிவைக்கப்படும் என்று ஏமாற்றி பணம் பறிக்க தொடங்கினர். இதை அடிக்கடி எச்சரிக்கை செய்த வங்கிகள், யாரிடமும் ஒடிபி, வங்கி கணக்கு எண், பின், பாஸ்வேர்டு உள்ளிட்ட எதையும் பகிர வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றன,
பிரதமர் மோடியின் பிறந்தநாள்.. 70 அடி நீள கேக் வெடி கொண்டாட்டம்
பணம் வந்துள்ளது
இந்த சூழலில் தற்போது சமீப காலமாக, "வங்கியில் இருந்து பேசுகிறேன். சுவிஸ் வங்கிகளில் இருந்து மீட்கப்பட்ட பணத்தை பொதுமக்களுக்கு பிரித்து கொடுக்கும் பணி நடந்து வருவதாக ஒரு கும்பல் மோசடியில் இறங்கி உள்ளது.
25 ஆயிரம் வரும்
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபடி ஒவ்வொரு நபருக்கும் ரூ.15 லட்சம் கொடுக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக ரூ.25 ஆயிரம் உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பப்படும். அதற்காக உங்கள் வங்கி கணக்கு விவரங்களை சொல்லுங்கள் என்று அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பேசுகிறார்கள். இதை நம்பி வங்கி கணக்கு விவரங்களை கூறுபவர்களிடம் இருந்து பணத்தை அபேஸ் செய்வது அதிகரித்துள்ளது.
இப்போது பெண்களும்
முன்பு ஆண்கள் மட்டுமே இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது ஏராளமான பெண்களும் இதுபோல் பேசி மோசடி செய்து வருகிறார்கள். பொதுமக்கள் பலர் ஏமாந்து வங்கி கணக்கில் உள்ள பணத்தை இழந்து பரிதவிக்கிறார்கள். இது தொடர்பான புகார்களும் போலீசுக்கு அதிகரித்துள்ளது.
நம்ப வேண்டாம்
இது தொடர்பாக பொதுமக்களை சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். இனி பிரதமர் சொன்ன ரூ.15 லட்சம் பணம் வந்திருப்பதாகக் கூறி வங்கி கணக்கு எண் கேட்டால் யாரும் தர வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரூ.15 லட்சம் பணம் வந்திருப்பதாக மோசடி செய்யும் கும்பல் ஒரே மாதிரியாக பேசுவதால், இவர்கள் அனைவரும் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.