விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.. உதயநிதி நியமனம் குறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Recommended Video
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் என்பதால் உதயநிதி நியமனத்துக்கு விமர்சனங்கள் வரத்தான் செய்யும் என்று கூறிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதை நண்பர் உதயநிதி தனது நடவடிக்கையால் மாற்றுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து அவரது நெருங்கிய நண்பரும், திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போத அவர், "திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் என்பதால் உதயநிதி நியமனத்துக்கு விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதை நண்பர் உதயநிதி தனது நடவடிக்கையால் மாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த தருணத்தை மிக மகிழ்ச்சியான தருணமாக உணர்கிறேன். நான்கு தலைமுறையாக எங்கள் குடும்பத்திற்கு இடையே நட்பு உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சிக்காக உதயநிதி பாடுபடுவார். ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் செய்யாமல் உதயநிதி இந்த இடத்தை அடையவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது உதயநிதி மக்களை வெகுவாக ஈர்த்தார். அவரது பிரச்சாரத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.
ஆனால் உதயநிதி எந்த பதவியையும் விரும்பவில்லை. இளைஞரணியில் பதவி வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. கட்சியின் வளர்ச்சிக்கு தன்னுடைய பங்கு, இருக்க வேண்டும் என்றே ஆசைப்பட்டார். திமுக நிர்வாகிகள் தான் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி பொறுப்பு தர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினை நெருக்கினார்கள். அனைத்து மாவட்ட செயலாளர்களும் இந்த கருத்தை தீர்மானமாகவே முன் மொழிந்தார்கள். அதனால் தான் உதயநிதிக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது " என்றார்.