10 ஆண்டுகள் நடந்தது நடந்து போச்சி! இனி ஆக வேண்டியதை பார்ப்போம்.. பக்குவமாக பேசிய அன்பில் மகேஷ்!
சென்னை: 10 ஆண்டுகள் என்ன நடந்தது என்பது குறித்து பேசி ஒன்றும் ஆக போவதில்லை, இனி மக்களுக்கு என்ன நன்மை செய்யலாம் என்பது குறித்து பார்ப்போம் என மிக பழுத்த அரசியல்வாதி போல் அண்ணா நூற்றாண்டு நூலக ஆய்வின் போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
Recommended Video
ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை அவரால் பார்த்து பார்த்து தேர்வு செய்யப்பட்ட ஒரு ஆரோக்கியமான டீமாகும். தமிழகத்தில் முக்கியமாக பள்ளிக் கல்வித் துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறை, நிதி துறை உள்ளிட்டவைகளுக்கு எந்த நபர் சரிப்பட்டு வருவார், யார் சீர்திருத்தத்தை கொண்டு வருவார்கள் என்று கருதியே அமைச்சர்களை தேர்வு செய்துள்ளார்.
அது போல்தான் முதல்வரை சுற்றியுள்ள அதிகாரிகளையும்! அந்த வகையில் பள்ளிக் கல்வித் துறையை எடுத்துக் கொண்டோமேயானால் நீட் தேர்வு, பல நுழைவுத் தேர்வுகள், தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட சவால்கள் நிறைந்த துறை 43 வயது இளைஞரான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வழங்கப்பட்டுள்ளது.
கருணாநிதி ஆட்சி
அமைச்சராகவே பொறுப்பேற்றதும் கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்ட அடையாற்றில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு ஆய்வு மேற்கொள்ள சென்றிருந்தார். அங்கு உள்ளே நுழையும் போது இருந்த பிளாஸ்டிக் விரிப்பை பார்த்தவுடனே இந்த நூலகம் 10 ஆண்டுகள் எப்படி பராமரிக்கப்பட்டது என்பதை உணர்ந்தார்.
அன்பில் மகேஷ் பேட்டி
ஆய்வுகளை முடித்துவிட்ட பிறகு அவர் பேட்டி அளித்தார். கருணாநிதியால் தொடங்கப்பட்ட காரணத்திற்காகவே இந்த நூலகம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்த நூலகம் மூலம் எத்தனை ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், தமிழகத்தின் உயர்பதவிகளுக்கான அதிகாரிகள் தேர்வுவாகியுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.
10 ஆண்டுகள் குறித்து தேவையில்லை
அத்தகைய நூலகம் இப்படி இருக்கிறது. 10 ஆண்டுகளாக என்ன செய்தார்கள் என்பதை விட்டுவிட்டு இனி மக்களுக்கு என்ன செய்ய போகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். மேலும் கல்வித் தொலைகாட்சியும் பல புதுமைகள் புகுத்தப்பட்டு அப்படியே ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
புரியும்படி சொன்ன அன்பில்
இந்த பேட்டியில் என்ன நடந்ததோ அதை மட்டுமே அன்பில் சொல்லியுள்ளார். ஆய்வின் போது என்ன குறையோ அதை கூறித்தான் ஆக வேண்டும், அதுதான் பராமரிப்பின்மை, எத்தனை ஆண்டுகள் என்ற கேள்வி வருமல்லவா அதற்கு 10 ஆண்டுகளாக என கூற வேண்டியதால் அவற்றை ஒன்று சேர்த்து 10 ஆண்டுகளாக பராமரிப்பில்லை என கூறியுள்ளார்.
சரியான ஆள்
ஆனால் அதிமுக அரசை அந்த பேட்டியில் ஒரு முறை கூட அனாயசயமாக குறை சொல்லவே இல்லை. மாறாக நடந்ததை பேசி ஒன்றும் ஆக போவதில்லை, இனி நடக்க வேண்டியதை பார்ப்போம் என்று கூறியிருந்தார். இதை பார்க்கும் போது 43 வயதில் ஒரு அரசியல்வாதிக்கு எத்தனை பக்குவம் என்றே நினைக்க தோன்றுகிறது. இனி மக்களுக்கு தேவை முந்தைய ஆட்சியின் குறை லிஸ்ட் அல்ல, தற்போதைய ஆட்சியின் செயல்திட்டமே! சரியான ஆளைத்தான் பிடித்தார் ஸ்டாலின்.