ரியல் சிக்சர்.. யாரும் சொல்ல முடியாத சுற்றுச்சூழல்.. ரொனால்டோவுக்கு, அன்புமணி பாராட்டு!
சென்னை: கோக்க கோலா பாட்டில்களை அகற்றி தண்ணீர் குடிக்கும்படி கூறிய கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பிரபலமான கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று செய்த ஒரே ஒரு சம்பவம் மூலம் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்து விட்டார். யூரோ 2020 கால்பந்து தொடர் லீக் ஆட்டத்துக்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
தனது மேஜையில் இருந்த 2 கோக்க கோலா பாட்டில்களை அதிரடியாக அகற்றிய அவர், அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடியுங்கள் என்று கூறினார். ரொனால்டோவின் இந்த ஒற்றை சொல் உலகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் பேசும் பொருளாகி விட்டது.
இந்த ஒற்றை சொல் கோக்க கோலாவின் பல ஆயிரம் கோடியையும் இழக்க செய்து விட்டது. ரொனால்டோவின் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தண்ணீர்தான் எப்போதும் முக்கியம் என்று அவர் உலகுக்கு பறைசாற்றி உள்ளார் என்று புகழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரொனால்டோவை பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசும் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ' யூரோ 2020 கால்பந்து போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் கோகோ கோலா பாட்டில்களை அகற்றி விட்டு, தண்ணீரைக் குடியுங்கள் என்று வலியுறுத்தி தண்ணீர் பாட்டிலை வைத்த நிகழ்வு யாரும் சொல்ல முடியாத சுற்றுச்சூழல், உடல் நலப் பாடம். #பாராட்டுகள்!
கோகோ கோலோ ஆதரவுடன் நடந்த நிகழ்வில் இப்படிச் செய்ய தனித் துணிச்சலும், சமூக அக்கறையும் வேண்டும். இந்த நிகழ்வால் கோக் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 30,000கோடி சரிந்திருக்கலாம். ஆனால், ரொனால்டோ சொன்ன பாடத்தின் மதிப்பு விலை மதிப்பற்றது. #ரியல்சிக்சர்! என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.