பேச்சுவார்த்தையும் நடத்திவிட்டு சூடு சொரணை இல்லையா என ஸ்டாலின் கேட்கலாமா?
ஏற்கனவே திமுக எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: அன்புமணி சொல்றதை பார்த்தால், திமுக வளைச்சு வளைச்சு எல்லோர் கூடவும் கூட்டணி சமாச்சாரத்தை பேசித்தான் வந்துள்ளது என தெரியவந்திருக்கிறது. கிட்டத்தட்ட தேமுதிக ரேஞ்சுக்கு எல்லா கட்சியுடனும் சகல ரூபங்களிலும் திமுக பேசி வந்துள்ளதும், பேசிக் கொண்டிருப்பதும் அன்புமணி பேட்டியிலிருந்து உணர முடிகிறது.
சில மாதங்களாகவே 2 விஷயங்கள் மீடியாவை வலம் வந்தன. ஒன்று, பாமக தனித்து போட்டியிடுமா? அல்லது கூட்டணி வைக்குமா? என்பது. தனித்து போட்டியிட வாய்ப்பில்லை என்பது எப்போதோ தெரிந்து விட்டது. ஏனென்றால் ஒரு கட்சி விடாமல் எல்லாரையுமே டாக்டர் ராமதாஸ் புள்ளி விவரத்துடன் வெளுத்து வாங்கி கொண்டிருந்தார்.
இதனிடையே கூட்டணி வைத்துதான் போட்டியிடுவோம் என்று அன்புமணி ராமதாஸ் சொல்லவும் தனியாக போட்டி இல்லை என்ற குழப்பம் தெளிவாகி அடுத்த குழப்பம் உருவானது. அது அதிமுகவா, திமுக என்பதுதான்!
ஆ.ராசா
இதில் யாரிடம் பாமக சேரப்போகிறது என்பதை யூகிக்கவே முடியவில்லை. இரு தரப்பையுமே மாறி மாறி கிண்டி நுங்கெடுத்துவிட்டார் ராமதாஸ். இந்த சமயத்தில் ஆ.ராசா ஒருபேட்டியில், பாமகவை கூப்பிட்டு எங்கள் எங்கள் தன்மானத்தை இழக்க விரும்பவில்லை என்று சொன்னார்.
இழுபறி
ராசா இப்படி சொன்னதும், அதிமுகவுடன் தான் கூட்டணி வைப்பார்கள் என்ற யூகம் தமிழக அரசியலில் வலுவானது. ஆனால் திரும்பவும் கூட்டணி இழுபறி என்ற தகவல் வந்தது. அப்போதுதான் ஒரு விஷயம் தெரியவந்தது, திமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் விரும்பவில்லை, ஆனால் அன்புமணி விரும்புகிறார் என்று.
சம்பந்தம் இல்லை
இறுதியில் அன்புமணி விருப்பம் நிராசையாகி அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டுவிட்டது. ஆனால் இப்போது திமுக எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது என்று அன்புமணி போட்டு உடைத்துள்ளார்.
இப்படி ஒரு பேச்சுவார்த்தை இதுவரை நடந்தது என்பதே தெரியாமல், தங்களுக்கும் பாமகவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதுபோலவும் திமுக நடந்து கொண்டு வந்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது.
உடல்நிலை
ஒருசில கட்சிகள் உள்ளே வரும் என்று துரைமுருகன் அன்று சொன்னதின் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது என்றாலும், திமுக பேச்சுவார்த்தை வரை சென்றிருக்கிறது என்பது வியப்புதான். ஆனால் மறைத்துள்ளது, இதேபோலதான் விஜயகாந்த்தை வீட்டுக்கு பார்க்க போய் கூட்டணி விஷயத்தை பேசிவிட்டு வந்துள்ளார் ஸ்டாலின். ஆனால், வெளியே உடல்நிலை காரணம் சொல்லப்பட்டாலும் நேற்று பிரேமலதா அதையும் உடைத்து பேசிவிட்டார்.
சூடு, சொரணை
கடைசியாக ஒன்றுதான் கேட்க தோன்றுகிறது... இவ்வளவு பேச்சுவார்த்தை நடத்தியும் பாமகவையும், தேமுதிகவையும் திமுகவால் உள்ளே கொண்டு வரமுடியவில்லையே ஏன்? பேச்சுவார்த்தையும் நடத்திவிட்டு சூடு, சொரணை இல்லையா என்று ஸ்டாலின் ராமதாஸை கேட்டது நியாயமா?
கருணாநிதி
பேச்சுவார்த்தைதான் நடத்தினோம் என்றுகூட சொல்ல தைரியம் இல்லாமல் பூசி மெழுகிகொண்டு, அடுத்த கூட்டணி கட்சிகளின் மீது சேற்றை வாரி இறைப்பது திமுகவிற்கு அழகா? கருணாநிதி இல்லையே என்று இப்போதுதான் அதிக கவலையாக இருக்கிறது, தொண்டர்களின் நிலையை நினைத்தால் அதை விட கவலையாகவும் இருக்கிறது.