தர்மபுரியில் தோற்ற அன்புமணி.. ராஜ்யசபா வழியாக நாடாளுமன்றம் போகிறார்.. பாமக அறிவிப்பு!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அன்புமணி ராமதாஸ் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார் அன்புமணி ராமதாஸ்.
ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக உயர்நிலைக் குழு கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினர் வேட்பளராக அன்புமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள ஜி.கே.மணி மாநிலங்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட உள்ளதாக கூறியுள்ளார்.
மக்களவை தேர்தல் கூட்டணியின் போது அதிமுக-வுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, பாமக-விற்கு தற்போது ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக-வை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் ரத்னவேல், மைத்ரேயன், அர்ஜூனன், லட்சுமணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.ராஜா, உள்ளிட்டோரின் பதவிகாலம் வரும் ஜூலை 24 அன்றுடன் நிறைவடைகிறது. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட கனிமொழி தற்போது மக்களவை உறுப்பினராக உள்ளார்.
எனவே கனிமொழி தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு காலியாக உள்ள 6 பதவிகளுக்கு, வரும் ஜூலை 18 தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் தற்போது உள்ள திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், இரு கட்சிகளும் தலா மூன்று பேரை மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய முடியும். இதனையடுத்து திமுக தரப்பில் 2 இடங்கள் திமுகவு-க்கும், ஒரு இடம் மதிமுகவு-க்கும் ஒதுக்கப்பட்டது. அதிமுக தரப்பில் 2 இடங்கள் அதிமுக-வுக்கும், ஒரு இடம் கூட்டணி கட்சியான பாமகவு-க்கும் ஒதுக்கப்பட்டது.
திமுக சார்பாக தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் இன்று வைகோ, சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்
அதிமுக சார்பாக முகமது ஜான், என்.சந்திரசேகரன் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள பாமக சார்பாக அன்புமணி ராமதாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி மக்களவை தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு 6 பேர் மட்டுமே போட்டியிடுவதால், தற்போதைய வேட்பாளர்கள் 6 பேருமே போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.