பொங்கல் என்றாலே ராமதாஸ் வீட்டில் ஸ்பெஷல்தான்.. பாரம்பரிய உடையில் கொண்டாடிய அன்புமணி, செளம்யா
அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பொங்கல் கொண்டாட்ட வீடியோ வைரலாகிறது.
சென்னை: பொங்கல் பண்டிகை என்றாலே ராமதாஸ் வீட்டில் கொஞ்சம் ஸ்பெஷல்தான்!!
ஒவ்வொரு வருஷமும் பொங்கல் என்றாலே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உற்சாகமாகி விடுவார். அரசியலையும் தாண்டி பாரம்பரியம், கலாச்சாரம், போன்றவற்றை பேணி காப்பதில் ராமதாஸ்க்கு நிகர் ராமதாஸ்தான்.
அதிக அளவு அக்கறை எடுத்து கொண்டு, அதனை பொங்கல்பண்டிகையின்போதும் வெளிப்படுத்துவார். அப்போது ஏதாவது வித்தியாசமாக செய்து அசத்தியும் விடுவார்.
மாட்டு வண்டி
அந்த வகையில் இந்த வருஷமும் இயற்கையால் உருவாக்கப்பட்ட பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு மேடையை தன் வீட்டில் தயார் செய்துள்ளார். இந்த மேடைக்கு பெயர் பொங்கல் மேடை ஆகும். முழுக்க முழுக்க கரும்புகளாலேயே மாட்டு வண்டி தயார் ஆகி உள்ளது.
பனிக்கரும்புகள்
அதில் மாடுகளை பூட்டி ஓடுவது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாட்டு வண்டி, மாடுகள் என எல்லாமே கருப்பு நிறத்தினால் ஆன பனிக்கரும்புகள்தான். பார்க்கவே படு வித்தியாசமாக உள்ளது. போன வருஷம்கூட இப்படித்தான் பன்னீர்க்கரும்புகளால், பொங்கல் பானை, குடில் என உருவாக்கினார்.
பொங்கல் கொண்டாட்டம்
இந்த போட்டோக்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது பொங்கல் வாழ்த்தையும் அதில் தெரிவித்துள்ளார். தைலாபுர தோட்டத்தில் இப்படி ஒரு புதுமையான போட்டோக்களை கண்டதும் இணையவாசிகள் பரவசமானார்கள்.
புதுப்பானையில் பொங்கல்
பொங்கல் பண்டிகை என்றாலே எல்லோரும் ஒன்றுசேர்ந்து தைலாபுரத்தில் கொண்டாடுவதுதான் ராமதாஸ் குடும்பத்தின் வழக்கமாக உள்ளது. ஒருபோட்டோவில், செங்கற்களால் வைக்கப்பட்ட அடுப்பில் புதுப்பானையில் பொங்கல் பொங்க, அன்புமணி ராமதாசும், அவரது மனைவியும் ஒரு நீளமான கரும்பு எடுத்து பானையை துழாவி விடுகின்றனர்.
பட்டுவேட்டி, சேலை
இன்னொரு போட்டோவில் பன்னீர்க்கரும்பினால் உருவான காளையை பிடித்து கொண்டு போஸ் கொடுக்கிறார்கள். தம்பதி இருவரும் பாரம்பரிய பட்டுவேட்டி, பட்டுசேலையில் பளிச்சென இருக்கிறார்கள்.