என்ன கொடுமை இது? அதிக மது விற்பனை செய்தவருக்கு பாராட்டு! தமிழ்நாடு எங்கே போகிறது? -அன்புமணி கேள்வி
தமிழ்நாட்டில் மது விலக்கை அமல்படுத்தக் கோரும் அன்புமணி ராமதாஸ்
சென்னை: அதிகளவில் மது விற்பனை செய்தவர்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கியிருப்பது தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு எங்கே போகிறது என வினவியுள்ள அவர், தமிழ்நாட்டில் மது விலக்கை நடைமுறைப்படுத்துவதாக அரசு அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள பதிவின் விவரம் வருமாறு;
ஏஜெண்ட் போல் உங்க அமைச்சரே இப்படி செய்யலாமா? நேராக முதல்வருக்கே புகாரை தட்டிவிட்ட அன்புமணி ராமதாஸ்!
மது விற்பனை
கரூர் மாவட்டத்தில் மிக அதிக அளவில் மது விற்பனை செய்து டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருவாய் தேடித் தந்ததற்காக அதன் பணியாளர்கள் 4 பேருக்கு கரூர் மாவட்ட நிர்வாகம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்துள்ளது. சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து திரும்பப் பெற்றுள்ளது!
பாராட்டு சான்று
இந்திய குடியரசு நாள் என்ற புனித நாளில், பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் கடைபிடித்துள்ள அளவீடு அதிர்ச்சியளிக்கிறது. எதிர்ப்பு எழாமல் இருந்திருந்தால் மது விற்றவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கும் கலாச்சாரம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நீட்டிக்கப்பட்டிருக்கக் கூடும்!
தமிழ்நாடு எங்கே போகிறது?
குடியரசு நாளில் ஒருபுறம் சென்னையில் கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் விருதை முதலமைச்சர் வழங்குகிறார்; மறுபுறம் மதுவிற்றவர்களுக்கு கரூர் ஆட்சியர் பாராட்டி சான்றிதழ் வழங்குகிறார். இது என்ன முரண்பாடு? தமிழ்நாடு எங்கே போகிறது?
பாவங்களுக்கு பரிகாரம்
டாஸ்மாக் மது விற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதன் பின்னணி குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இத்தகைய பாவங்களுக்கு பரிகாரம் தேடவும், மக்களைக் காக்கவும் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக அரசு அறிவிக்க வேண்டும்!