நெகிழ்ச்சி.. அப்படியே "உடைந்து விம்மிய" அன்புமணி ராமதாஸ்.. கண்ணீரை துடைத்தபடி.. வைரலாகும் வீடியோ
சென்னை: போனில் பேசிக் கொண்டிருந்தபோது, கண்ணீர் வழிய விம்மும் குரலில் அப்படியே உடைந்து போகிறார், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ். இந்த வீடியோ இப்போது வைரலாக சுற்றி வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இடஒதுக்கீடு கோரி, பாமக மற்றும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைப்பினர், நீண்ட காலமாகவே, பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நடைபெற்ற சட்டசபை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், இன்று வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதல்வர் எடப்பாடியார் தாக்கல் செய்தார்.
வன்னியர் இட ஒதுக்கீடு
பின்னர் வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர் சமுதாய மக்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வழிவகை செய்யும். இதை வன்னியர் சமூக மக்கள் வரவேற்கிறார்கள்.
போனில் பேசும் அன்புமணி
இந்த நிலையில்தான் அன்புமணி ராமதாஸ் தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டி-சர்ட் அணிந்தபடி அமர்ந்துகொண்டே அன்புமணி ராமதாஸ் யாரிடமோ தொலைபேசியில் பேசுகிறார். அப்போது அன்புமணி ராமதாஸ் இப்படி பேசுகிறார்: 40 வருட உழைப்பு.. இன்று 10% வழங்குவதாக சட்டம் நிறைவேறியுள்ளது.
கண்ணீர்விட்ட அன்புமணி
40 வருடங்களாக இதற்குத்தான் உழைத்தோம். (இவ்வாறு அவர் கூறும் போது கண்களில் அதிகம் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, தனது கைகளால் அவற்றை துடைத்துக் கொண்டு பேசுகிறார்.. அப்போது அவர் அவர் குரல் கம்மியது) 40 வருட உழைப்பு நிறைவேறியுள்ளது. இது முதல்கட்ட முதல் கட்டம் தான். அடுத்தது இன்னும் கொஞ்சம் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம்.
40 வருட உழைப்பு
40 வருடங்கள் சாதாரண உழைப்பு கிடையாது. எவ்வளவு தியாகம் செய்துள்ளோம். இவ்வாறு அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் எதிர்முனையில் யார் பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை. சிலர் எதிர்முனையில் பாமக நிறுவனரும், அன்புமணி தந்தையுமான டாக்டர். ராமதாஸ் பேசியதாக கூறுகிறார்கள்.
இதை அருகில் இருந்து யாரோ வீடியோவாக எடுத்து பின்னர் அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாமக கட்சியை சேர்ந்தவர்கள் இதை பார்த்து புகழ்ந்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.