எல்லாம் சுபம்.. அதிமுகவுக்கு அன்புமணி ராமதாஸ் சொன்ன குட்நியூஸ்.. இன்றே பைனலாகுமா? .
சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா சட்டசபையில் நேற்ற நிறைவேறிய நிலையில் அதிமுக- பாமக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என்று கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு எத்தனை இடங்கள் என்பது இன்றே இறுதி செய்யப்படுமா என்பது தெரிய வாய்ப்பு உள்ளது.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இதனை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்கள் ராமதாஸ் தலைமையில் நடந்தது. சென்னையில் நடந்த போராட்டம் பெரிய அளவில் விவாதப்பொருளாகவும் மாறியது.
அப்புறம் பேசலாம்
இந்நிலையில் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிமுக முயன்றது, ஆனால் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அளித்தால் மட்டுமே கூட்டணி பற்றி பேசலாம் என்று அதிமுக தலைவர்களிடம் ராமதாஸ் வெளிப்படையாக தெரிவித்தார்.
அமைச்சர்கள்
இது தொடர்பாக அவர் ட்விட்டரிலும் வெளியிட்டார். தொடர்ந்து அதிமுக தலைமை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் பேச்சுவார்ததை நடத்தி வந்தது. மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் அமைச்சர்களும் வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
உள்ஒதுக்கீடு
இந்த பேச்சுவார்த்தை முடிவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வன்னியர்களுக்கு அளிக்க அதிமுக அரசு ஒப்புக்கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இதனை அப்போது யாரும் மறுக்கவில்லை. எனினும் சரியான நேரத்தில் உள்ஒதுக்கீடு குறித்து அறிவிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒருமுறைபேட்டியின் போது கூறியிருந்தார.
மசோதா நிறைவேற்றம்
இந்நிலையில் நேற்று மாலை வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேறியது. இதனால மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ள அன்புமணி ராமதாஸ், பாமக நிறுவனர் ராமதாஸிடம் போனில் பேசும் போது கண்ணீர் விட்டு அழுது நெகிழ்ச்சி தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றியும் தெரிவித்தார்.
தொகுதி பங்கீடு
இந்நிலையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதை அடுத்து இன்று அதிமுக- பாமக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என அன்புமணி ராமதாஸ் நேற்று கூறினார். சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக தலைமை இன்று முதல் பேச தொடங்கி உள்ளது. பாஜகவிடம் முதற்கட்டமாக இன்று காலை பேசி தொகுதியை இறுதி செய்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ், இனி பாமக தலைவர் ராமதாஸிடம் இன்றே பேசக்கூடும் என தெரிகிறது. அன்புமணி ராமதாஸ் பச்சைக்கொடி காட்டியதால் அதிமுக பாமக கூட்டணி உறுதியாகி உள்ளது. கிட்டத்தட்ட 23 தொகுதிகளை பாமகவுக்கு அதிமுக அளிக்க விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது. இதை பாமக ஏற்குமா என்பது இன்றே தெரிய வாய்ப்பு உள்ளது.