"சார்.. ரயில் மேல பாமகவினர் கல்லெறிந்தது சரியா".. அன்புமணிக்கு வந்துச்சு பாருங்க கோபம்..!
செய்தியாளர்களிடம் கோபப்பட்டார் அன்புமணி ராமதாஸ்
சென்னை: ரயில் மேல பாமகவினர் கல்லெறிந்தது சரியா என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு, அன்புமணி டென்ஷன் ஆகிவிட்டார்.. இதற்கு பதில் ஏதும் சொல்லாமல் வேகமாக காரை எடுத்துக் கொண்டு அன்புமணி அங்கிருந்து கிளம்பியதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டு விட்டது.
வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று முதல்வரை சந்தித்து பேசி, கோரிக்கை வைக்க பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை செயலகம் வந்திருந்தார்.. பிறகு, இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்வரிடம் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை மனுவையும் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, "20 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.. நல்ல முடிவு எடுப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். பாமக தொண்டர்கள் அறவழியில் தான் போராட்டம் நடத்தினர்" என்றார்.
மறியல்
அப்போது செய்தியாளர்கள், பாமகவினர் ரயிலில் கல்லெறிந்து வன்முறையில் செய்துள்ளனரே, என்று அதை பற்றி கேட்டனர்.. அதற்கு அன்புமணி, "அது பாமகவினர் இல்லை.. வேறு யாரோ செய்தனர்" செய்தனர் என்றார்..
உடனே செய்தியாளர்கள், காலையில் ரயில் மீது பாமகவினர் கல்லெறிந்தது தொடர்பான போட்டோ, வீடியோக்களில் பாமகவினரின் கொடி இருந்தது.. டி-சர்ட் அணிந்திருந்தனரே என்று மறுபடியும் கேள்வி எழுப்பினர்.
கோபம்
ஆனால், இதற்கு அன்புமணி பதில் சொல்லாமல் கோபமாக கிளம்பிவிட்டார்.. செய்தியாளர் சந்திப்பும் பாதியிலேயே முடிவடைந்தது. பிறகு அன்புமணியுடன் வந்திருந்த ஒரு தொண்டர், இனிமேல் இப்படியெ,லலாம் கேள்வி கேட்காதீங்க என்று செய்தியாளர்களை மிரட்டிகொண்டிருந்தார்.. அந்த நேரத்தில் அன்புமணி காரை வேகமாக எடுத்து கொண்டு வேகமாக கிளம்பி சென்றுவிட்டார்... பின்னர் அந்த இடமே சிறிது நேரம் பரபரப்பாகிவிட்டது.
அதிமுக - பாமக
செய்தியாளர்களிடம் அன்புமணி கோபப்படுவது இதற்கு முன்பும் நடந்தது.. இப்படித்தான் கடந்த வருடம், அதிமுக - பாமக கூட்டணி குறித்து அன்புமணி செய்தியாளர்களிடம் விளக்கம் தந்து கொண்டிருந்தார்.. அதிமுகவுக்கு எதிராக நீங்கள் வைத்த புகார்களுக்கு மன்னிப்பு கேட்க தயாரா? என்றும், விஜயபாஸ்கர் மீதான உங்களின் புகார்கள் அப்படியேதான் இருக்கிறதா? அதற்கு மன்னிப்பு கேட்பீர்களா? என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
பரபரப்பு வீடியோ
இதை கேட்டு அதிர்ந்து போன அன்புமணி, "எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு.. செய்தியாளர்கள் அசிங்கமாக நடந்து கொள்ள வேண்டாம்.. விட்டா என்னை அடிச்சிட்டுவீங்க போல" என்று ஆவேசமானார். இப்போது மறுபடியும் அதே டென்ஷனை அன்புமணி வெளிப்படுத்தி உள்ளதும், தலைமை செயலகத்தில் ஏற்பட்ட அந்த பரபரப்பு வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.