பாமக அன்புமணி ராமதாஸ் கையில் அக்னி கலசம் டாட்டூ... புதிய அரசியல் உத்தியா?
சென்னை: பாமக அன்புமணி ராமதாஸ் தனது வலது கையில் அக்னி கலசம் டாட்டூ அணிந்து இருக்கிறார். வன்னியர் சமுதாயத்தின் அடையாளமாக இந்த அக்னி கலசம் இருக்கிறது என்பதை மறைமுகமாகவும், நேரடியாகவும் காட்டி இருக்கும் அன்புமணி ராமதாஸ் தனது அடையாளத்தை அரசியலில் மாற்றிக் கொள்கிறாரா என்ற புரிதல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் காணொளி காட்சி மூலம் வன்னியர் சங்க நிர்வாகிகளிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் திடீரென தனது கை சட்டையை மேலெடுத்து அக்னி கலசம் டாட்டூ குத்தி இருப்பதைக் காட்டினார். எனக்கு ரொம்ப நாள் ஆசை. அக்னி கலசத்தை பச்சையாக குத்திக்க வேண்டும் என்று. அதை தற்போது செய்துள்ளேன் என்றார். அப்போது, வலி இருந்ததா? என்று நிர்வாகிகள் கேட்டபோது, 'இல்லை' என்றவர். இது சாதியக் கட்சி இல்லை. அடித்தளத்தில் வன்னியர் சங்கம் இருக்கிறது. பாஜகவுக்கு எப்படி ஆர்எஸ்எஸ் இருக்கிறதோ அதுபோன்றுதான். சமூக நீதியாக தொடங்கப்பட்ட கட்சிதான் பாமக'' என்று அன்புமணி கூறியுள்ளார்.
வன்னி என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் நெருப்புத்தீ என்று பொருள்படுகிறது. திராவிடத்தில் வலிமை என்று பொருள்படுகிறது. தமிழில் வன்னி என்பது மரத்தின் பெயரைக் குறிக்கிறது. இவர்கள் முன்னொரு காலத்தில் பள்ளி என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளனர். சமஸ்கிருதத்தில் பள்ளிக்கு வனம் என்ற பொருளும் உண்டு. அதாவது அக்னியில் இருந்து பிறந்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள்.
இந்த நிலையில்தான், அன்புமணியும் தனது கையில் அக்னி கலசம் டாட்டூ குத்தியுள்ளார். இதற்கு தருமபுரி திமுக எம்.பி., செந்தில் குமார் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். ''சிறுவயதில் அம்மை வந்து இருந்தால், அதனால் சிறு தழும்புதான் ஏற்பட்டு இருக்கும். ஆனால், சாதி மறுப்பு சமூக நீதி கொள்கைகளை பெற்றோர் சொல்லிக் கொடுக்கவில்லை என்றால் இருதயத்தில் உள்ள அசுத்தம் இப்படித்தான் ஒரு நாள் இவ்வளவு பெரிய தழும்பாக ஏற்படும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
''அக்னி கலசத்தை செந்தில் குமார் அவமானப்படுத்தி விட்டார்'' என்று பாமக தற்போது குற்றம்சாட்டி வருகிறது. போஸ்டர் அடித்து செந்திலையும், திமுகவையும் பாமக கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்துள்ளது. வன்னியர் சமுதாயத்தை அவமானப்படுத்தி இருக்கும் திமுக எம்.பி., மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினையும் ஒருபோதும் இந்த சமுதாயம் மன்னிக்காது என்று தெரிவித்துள்ளனர். பாமக தலைவர்களும் கடுமையாக திமுகவையும், செந்தில் குமார் எம்.பியையும் சாடி வருகின்றனர். தற்போது இந்த அக்னி கலசம் பாமகவின் அடையாளமாக மாறி போஸ்டர் சர்ச்சையாகவும் மாறி வருகிறது.
இதற்கு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து இருக்கும் செந்தில் ஆதரவாளர்கள், ''பாமக மீண்டும் சாதிய வலைக்குள் சென்றுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் அன்புமணி ராமதாசின் அக்னி கலசம் டாட்டூவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
கடந்த 2016 தேர்தலில் தமிழகத்தில் அனைவருக்கும் நான் பொதுவானவன் என்று தெரிவித்திருந்த அன்புமணி தற்போது ஏன் சாதியத்தை அடையாளமாக காட்டும் வகையில் அக்னி கலசம் டாட்டூ குத்திக் கொள்ள வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் அன்புமணியின் செயலுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் தெரிவித்து உள்ளனர்.
அடிப்படை மருத்துவ வசதி கூட இல்லை, முதியோர்கள் அதிகம்.. தென் மாவட்டங்களை எப்படி காப்பாற்றப் போகிறோம்?
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், திடீரென வன்னியர் சங்கத்தினரை அன்புமணி சந்திப்பதன் மூலம் மீண்டும் பாமக சாதிய கட்சி என்று அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறதா? அந்த அடையாளம் இருந்தால்தான் அரசியல் களத்தில் நிற்க முடியும் என்று அன்புமணி கருதுகிறாரா? தமிழகத்துக்கு பொதுவானவன் என்று கூறியது எதற்காக? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.