பா.ம.க.வில் முப்படைகள்...! அன்புமணியின் புது வியூகம்
சென்னை: 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சியில் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கிய அன்புமணி ராமதாஸ் மாற்றம், முன்னேற்றம் என்ற முழக்கத்துடன் மக்களை சந்தித்தார். ஹை-டெக் பிரச்சார உத்திகளையும் கையாண்டார். மேலும், மதுவுக்கு எதிரான அவரது பிரச்சாரம் மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மாற்று அரசியலை முன்வைத்த போதும் ஜெயலலிதா, கருணாநிதி என்ற பெரிய ஆளுமைகள் அப்போது இருந்ததால் அன்புமணியால் அப்போது சோபிக்கமுடியவில்லை.
ஆனால், இன்று களநிலவரம் வேறு மாதிரி உள்ளது. இதனை உணர்ந்துகொண்ட அன்புமணி ராமதாஸ், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமகவை கணிசமான தொகுதிகளில் வெற்றிபெற வைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளார். குறிப்பாக பாமகவின் வாக்குவங்கி உள்ள வடதமிழகத்தில் 90 தொகுதிகளை அடையாளம் கண்டு அங்கு தீவிர களப்பணியை முன்னெடுத்துள்ளார்.
பொங்கல் முன்பதிவு.. தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் காலி.. தென் மாவட்ட பயணிகள் அதிர்ச்சி!
தம்பிகள் படை, தங்கைகள் படை என இரண்டு படைகளை அமைத்து அதில் ஒவ்வொரு படைக்கும் 1000 இளைஞர்கள், இளம்பெண்களை சேர்த்து அவர்கள் மூலம் தொகுதியில் ஒரு லட்சம் பேரை மக்கள் படையாக உருவாக்க திட்டமிட்டுள்ளார் அன்புமணி. வடதமிழகம் மட்டுமல்லாமல் தமிழகம் தழுவிய அளவிலும் பா.ம.க.வை வலுப்படுத்த இளைஞர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
மது ஒழிப்பு போராட்டங்கள் மூலம் கடைக்கோடி மாவட்டங்களான ராமநாதபுரம், கன்னியாகுமரி வரை பாமகவை பற்றிய அறிமுகம் மக்களுக்கு உண்டு. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மூலமே கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்பது அன்புமணியின் நம்பிக்கையாம். அதனால் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லையாம்.