ஜெயலலிதாவுக்கு மணிமண்டபமா என்ற குற்றச்சாட்டு... பதில் அளிக்க மறுத்த அன்புமணி
சென்னை:ஊழல்வாதி ஜெயலலிதாவிற்கு மணிமண்டபமா என்று கூறியது பற்றி செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அன்புமணி பதில் அளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.
அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறியிருந்த பாமக, தற்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிப்பது கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என்று விளக்குவதாக பாமக தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அக்கட்சியின் இளைஞரணி தலைவரான அன்புமணி ராமதாஸ் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அன்புமணி பேட்டி
அப்போது அவர் கூறியதாவது:திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, தேர்தலில் களமிறங்கிய போது, ஊடகங்கள் ஏன் அங்கீகாரம் கொடுக்கவில்லை? கூட்டணி இன்றி தனித்து களம் இறங்கிய போது எங்களுக்கு 6 சதவீதம் வாக்குகள் கிடைத்தது.
மதுவிலக்கு
நீட் மற்றும் பூரண மதுவிலக்கு தொடர்பாக கூட்டணிக்குள்ளேயே இருந்து கொண்டு கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்துவோம். மத்தியில், மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருப்பவர்களுடன் கூட்டணி சேர்ந்தால்தான் கோரிக்கைளை நிறைவேற்ற முடியும்.
திருமாவளவன், வைகோ
திமுகவையும், அதிமுகவையும் திருமாவளவனும் தான் விமர்சித்திருக்கிறார். வைகோவும் தான் விமர்சித்திருக்கிறார். ஒரு கட்சியை விமர்சித்தால் அந்த கட்சியுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்பது இல்லை..
அகிலேஷ், மாயாவதி
உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், மாயாவதி கூட்டணி வைக்கவில்லையா? மகாராஷ்டிராவில் பாஜகவை விமர்சித்த சிவசேனா கூட்டணி வைக்கவில்லையா? தற்போது தமிழக மக்களின் நலன்களுக்காக தான் அதிமுக, பாஜகவிடம் கூட்டணி வைத்திருக்கிறோம்.
வியூகங்களை மாற்றினோம்
கருணாநிதியும் இல்லை, ஜெயலலிதாவும் இல்லை என்பதால் கூட்டணி வியூகங்களை மாற்றி இருக்கிறோம். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.
திருமா விமர்சனம்
எங்களை விமர்சனம் செய்தால்தான் திருமாவளவனுக்கு மதிப்பு கிடைத்திருக்கிறது. அப்படி தொடர்ந்து செய்தால் தான் அப்போதுதான் திருமாவளவனுக்கு சீட் கிடைக்கும்.
பின்வாங்க மாட்டோம்
எப்போதுமே திமுக, அதிமுக செய்யும் குறைகளை சுட்டிக்காட்டி வந்துள்ளோம்.. நாங்கள் போராடிய பிரச்னைகளை தொடர்ந்து வலியறுத்தி போராடுவோம். அதில் இருந்து பின்வாங்க மாட்டோம்.
8 வழிச்சாலை திட்டம்
8 வழி சாலை திட்டத்தை நாங்கள் தொடந்து எதிர்ப்போம். பாஜக, அதிமுகவின் பசுமை வழி சாலை திட்டத்தை பாமக ஏற்காது. அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. அதனை சட்டப்படி சந்திப்போம்.
ஊடகங்கள் மீது விமர்சனம்
கொள்கைகளை விட்டுக் கொடுத்தது கிடையாது. வலியுறுத்த வேண்டிய இடத்தில் வலியுறுத்துவோம், போராட வேண்டிய இடத்தில் போராடுவோம். அப்போது செய்தியாளர் ஒருவர் ஊழல்வாதி ஜெயலலிதாவிற்கு மணிமண்டபமா என்று கூறியது பற்றி கேள்வி எழுப்பினார்.
பதில் சொல்ல மறுப்பு
ஆனால், அதற்கு அன்புமணி பதில் அளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். அதே நேரத்தில் பல கேள்விகளின் போது ஊடகங்களை அவர் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.