கொரோனா: சமூக பரவலின் விளிம்பில் இந்தியா.. கூடுதல் கவனம் தேவை.. எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்
சென்னை: இந்தியாவில் நிலைமை மோசமாகி வருகிறது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் 2 மற்றும் 3ஆவது கட்டத்திற்கு இடையே உள்ளது என மாநிலங்களவை எம்பி அன்புமணி தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், இந்தியாவில் கொரோனா பரவி வருவதை கண்டு அனைவரும் அஞ்சி வருகிறார்கள். இந்த கால கட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது அவசியமாகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் எந்த கட்டத்தை அடையக் கூடாது என அனைவரும் அஞ்சி கொண்டிருந்தோமோ அந்த சமூக பரவல் கட்டத்தை நாட்டின் சில பகுதிகளில் எட்டியிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் இயக்குநரும் மத்திய அரசின் கொரோனா தடுப்பு பணிக் குழுவின் உறுப்பினருமான மருத்துவர் ரந்தீப் குலோரியா தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகவும் முக்கியமானது.
குலோரியா
இந்தியாவின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்துவிட்டது. அப்பகுதிகளில் சமூகப் பரவல் தொடங்கி விட்டதையே இது உணர்த்துகிறது என குலோரியா கூறியுள்ளார். மத்திய சுகாதாரத் துறையின் இணை செயலாளரும் இதை வேறு வார்த்தையில் ஒப்புக் கொண்டுள்ளார்.
உள்ளூர் பரவல்
அதே நேரம் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரஸ் அதன் இரண்டாம் நிலையான உள்ளூர் பரவல் நிலையில்தான் இருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்தியா கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது கட்டத்திற்கும், மூன்றாவது கட்டத்திற்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியிருப்பது இந்தியாவில் நிலைமை மோசமாகி வருவதையே காட்டுகிறது. இதை தடுக்க நோய்ப் பரவல் நடவடிக்கைகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டாக வேண்டும்.
எங்கு மூன்றாவது கட்டம்
கொரோனா வைரஸ் எங்கெல்லாம் மூன்றாம் கட்டத்தை அடைந்திருக்கிறது என்பது குறித்து மருத்துவர் குலோரியா குறிப்பிட்டு எந்த விஷயத்தையும் கூறவில்லை. அதே நேரத்தில் டெல்லியில் நடைபெற்ற மாநாடு தான் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்ததற்கு காரணம் என்றும் அந்த பகுதிகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா அதிக பாதிப்பு
இந்த வரைவு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பொருந்தும் என்பதால் அவசர நிலையை கருதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள சென்னை, கோவை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பெரும்பான்மையான மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆளான இடங்கள் அனைத்தும் மூடப்பட்டு அங்கு வீடு வீடாக சுகாதாரத் துறை பணியாளர்கள் சென்று நோய்த் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊரடங்கை மீறுவது
அவை முறையான நடவடிக்கைகள் ஆகும். அத்தகைய நடவடிக்கைகள் கொரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அந்நடவடிக்கைகள் மட்டுமே போதுமானவை அல்ல. இந்தியாவில் கொரோனா பரவிய நாள் முதல் அதற்கான சிறந்த மருந்தாக கருதப்படும் சமூக இடைவெளியே ஆகும். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஏராளமானோர் ஊரடங்கை மீறுவது வேதனையை தருகிறது.
ஆரம்ப காலம்
ஊரடங்கு என்பது யாரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பதுதான். அந்த நிலையை உறுதி செய்தால் மட்டுமே சமூகப்பரவல் எனப்படும் 3ஆவது நிலையை தமிழகம் அடைவதை தடுத்து நிறுத்த முடியும். எய்ம்ஸ் இயக்குநரும் மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளரும் தெரிவித்துள்ள கருத்துகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா அடுத்த நிலைக்கு சென்றுவிட்டாலும் பீதியோ பதற்றமோ தேவையில்லை. ஏனெனில் இதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்திவிடலாம்.
ரத்து
எனவே தமிழக மக்கள் ஊரடங்கை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும். அவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். அத்துடன் பொதுமக்கள் கூட்டமாக கூடும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இப்போதை காட்டிலும் ஊரடங்கை மேலும் கடுமையாக அரசு அமல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.