பாமக ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும்... அன்புமணி ராமதாஸ் போடும் புதுக் கணக்கு
சென்னை: தமிழகத்தை சிறப்பாக வழிநடத்த பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக தொடர வேண்டும் என்பது தான் அதிமுக தலைமையின் விருப்பம்.
இந்நிலையில் பாமக முப்படை நிர்வாகிகளிடம் காணொலி மூலம் கலந்துரையாடிய அன்புமணி ராமதாஸின் பேச்சு அதிமுகவை அதிரவைத்துள்ளது.
கனிமொழி போட்ட "ஹிந்தி வெடிகுண்டு".. விடுமா பாஜக.. "இந்தி இல்லாமல் இந்தியா இல்லை" பதில் முழக்கம்
மாற்றம் முன்னேற்றம்
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மாற்றம் முன்னேற்றம் என்ற முழக்கத்தை முன் வைத்து 2016-ம் ஆண்டு தேர்தல் பரப்புரை செய்தார். மேடைகளில் நாற்காலிகள் போட்டு வரவேற்புரை, நன்றியுரை என ஆற்றி பார்வையாளர்களின் நேரத்தை வீணடிக்காமல் ஹை டெக் முறையில் பிரச்சாரம் செய்தார் அன்புமணி. வெளிநாடுகளை போல் தேர்தல் பிரச்சார மேடைகளை வடிவமைத்தார். இது மக்கள் கவனத்தை அப்போது பெரியளவில் ஈர்த்தது.
32 ஆண்டுகள்
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு கால் நூற்றாண்டை கடந்துள்ள நிலையில் இன்னும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாதது அன்புமணி ராமதாசுக்கு தீராத வடுவாக இருந்து வருகிறது. இதனிடையே கட்சியின் அமைப்பை வலிமைப்படுத்தி அதிக உறுப்பினர்களை சேர்க்கும் பணியை கடந்த ஒரு வருடமாக அவர் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை என்ற முப்படைகளை உருவாக்கியுள்ளார்.
2021-ல் கூடுதல் கவனம்
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக 6% வாக்குகளை பெற்றது. இது திமுக, அதிமுக, ஆகிய இருபெரும் கட்சிகளின் புருவம் உயர வைத்தது. இந்நிலையில் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் கவனம் செலுத்தி ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுள்ள முப்படை நிர்வாகிகளை வைத்து வாக்கு சதவீதத்தை இரட்டை இலக்கத்தில் பெற பாமக பணிகளை தொடங்கிவிட்டது.
அன்புமணி பேச்சு
கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 மாதமாக நிர்வாகிகள் சந்திப்பை தவிர்த்து வந்த அன்புமணி ராமதாஸ், இப்போது காணொலி மூலம் அவர்களிடம் பேசி உற்சாகப்படுத்தி வருகிறார். தான் உருவாக்கிய முப்படைகள் நிர்வாகிகளுடன் காணொலியில் பேசிய அவர், பாமக செயல்படுத்த வேண்டும் எனக் கூறும் திட்டங்களை ஆந்திர முதல்வர் ஜெகன் சிறப்பாக செயல்படுத்துகிறார் என புகழாரம் சூட்டினார்.
உழைப்பு தேவை
இதேபோல் தமிழகத்திற்கும் நல்ல ஆட்சி தேவைப்படுவதாகவும், தமிழகத்தை சிறப்பாக வழிநடத்த பாமக ஆட்சிக்கு வரவேண்டும் எனவும் கூறியுள்ளார். தேர்தல் நெருங்குவதால் இன்னும் அதிகமாக நாம் உழைக்க வேண்டும் எனப் பேசிய அவர் பாமகவின் சாதனைகளை, திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அன்புமணி பேச்சு
அதிமுகவுடன் பாமக கூட்டணியில் தொடரும் நிலையில் அன்புமணியின் இந்தப் பேச்சு அதிமுக தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக தொடர்வதாக கூறப்படும் நிலையில் அன்புமணி போடும் புதுக் கணக்கு இரு கட்சிகளிடையே விவாதத்தை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.