அமைச்சர் முன்னிலையில்.. அதிமுக வேட்பாளரை திட்டிய அன்புமணி ராமதாஸ்.. என்னாச்சு, ஏன் இப்படி?
Recommended Video
சென்னை: அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த பிரச்சார மேடையில், அதிமுக வேட்பாளரை திட்டித் தீர்த்தார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம். உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதில் பாமக மற்றும் அதிமுக நடுவேயான கூட்டணி யாருமே எதிர்பார்க்காத வகையில் அமைந்துவிட்டது.
யாருமே எதிர்பார்க்காத... என்ற வார்த்தை ஏன் முக்கியமானது என்றால், அதிமுக தலைவர்கள் பற்றி, அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு கிழி கிழியென கிழித்து தோரணம் கட்டி தொங்க விட்டவர்கள், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ்.
அமைச்சர் சண்முகம்
இருப்பினும், எல்லாம் சுபமாக நடந்து முடிந்தது. தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக தலைவர்களுக்கு, விருந்து கொடுத்து அசத்தினார் ராமதாஸ். அங்கு ஒரு சிக்கல் எழுந்தது. 2006ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தின் உறவினர் முருகானந்தம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராமதாஸ், அப்போது மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனால் ராமதாசுக்கும், சி.வி. சண்முகத்துக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்ததுதான் இந்த சிக்கலுக்கு காரணம்.
ஆரணி தொகுதி
தைலாபுரம் தோட்டத்தில் இரவு விருந்து தொடங்கியதும் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. சி.வி.சண்முகம் முதல் ஆளாக ஆஜராகினார். அவருக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தார் ராமதாஸ். ஆனால், இப்போது மீண்டும் ஒரு உரசல் இவ்விரு கட்சிகள் நடுவே ஆரம்பித்துள்ளது. ஆரணியில் அதிமுக சார்பில் வெ.ஏழுமலை போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய சென்றிருந்தார் அன்புமணி.
10 நாட்கள் உட்காரக் கூடாது
மேடையில், அமைச்சர் சி.வி.சண்முகமும் அமர்ந்திருந்தார். மேடையின் முன்னால் நின்றபடி, அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார். அப்போது, திடீரென, "எங்கப்பா வேட்பாளர்" என கேட்டபடி பின்னால் திரும்பி பார்த்தார். அப்போது வேட்பாளர் ஏழுமலை, நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரை பார்த்து நாங்க இங்க வெயில்ல நின்னுகிட்டு இருக்கோம். நீங்க உட்கார்ந்து இருப்பதா என கேட்ட அன்புமணி, கூட்டத்தினரை நோக்கி கையை நீட்டியபடி, எவ்வளவு கஷ்டத்தில் வெயிலில் நிற்கிறார்கள் என்ற அன்புமணி, வேட்பாளர் ஏழுமலையை பார்த்து, 10 நாளைக்கு உட்காரக்கூடாது சேரில் என்றார்.
காங்கிரஸ் வேட்பாளர்
அன்புமணி கடினமான குரலில் இதை பேசியதுதான் ஹைலைட். அமைச்சர் மேடையில் இருக்கும்போதே, அதிமுக வேட்பாளரை அன்புமணி இப்படி பேசியிருக்க கூடாது என்ற குரல்களும் அதிமுகவிற்குள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. ஆரணி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் விஷ்ணுபிரசாத். இந்த கூட்டத்தில், அவரை ஒரு வார்த்தை கூட அன்புமணி விமர்சிக்கவில்லையாம். மாறாக, அதிமுக வேட்பாளரை விட்டு விளாசியது இந்த சர்ச்சை நெருப்புக்கு மேலும் நெய் ஊற்றியுள்ளது.