மேட்டர் சீரியஸ்.. 144 தடையால் பலன் இல்லை.. ஊரடங்கு உத்தரவு தேவை.. அரசுக்கு அன்புமணி கோரிக்கை
முழு ஊரங்குதான் தேவை என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: 144 எதுக்கு? 5 பேர் ஒரே இடத்தில்கூட 144-ல் தடை இருக்காது.. அப்படி இருக்கும்போது இந்த தடை உத்தரவு எப்படி நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.. மேலும் ஊரடங்கு உத்தரவு ஒன்றுதான் சரியான தீர்வு என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
Recommended Video
கொரோனா தொற்று வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு கருத்துக்களையும், ஆலோசனைகளையும், வேண்டுகோள்களையும் விடுத்து வருபவர்கள் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சி இணைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்!
கொரோனாவை கட்டுப்படுத்த போதிய கட்டுமான மருத்துவ வசதிகள் நம் நாட்டில் இல்லை என்பதால், மொத்த இந்தியாவையும் லாக் அவுன் செய்ய வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.. சுய ஊரடங்கு போலவே 31-ம் தேதி நீட்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
அன்புமணி
இந்நிலையில் தமிழக அரசு 144 உத்தரவு பிறப்பித்துள்ளது.. ஆனால் 144 ஓரளவுதான் தொற்று பரவலை தடுக்கும் என்றும் முற்றிலும் பரவுவதை தடுக்காது என்றும் தெரிவித்து ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்த வேண்டும் என்று அன்புமணி கோரி உள்ளார். இது சம்பந்தமாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் சொல்லி உள்ளதாவது:
வேகம்
"இன்றுமுதல் 31-ம் தேதி வரை 144 தடை ஆணை பிறப்பிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.. இது வரவேற்கத்தக்கது.. ஆனாலும் பொது இடங்களில் மக்கள் கூடுவதை முழுமையாக தடுக்க வகை செய்யப்படாதது ஏமாற்றம் தருகிறது.. இந்த வைரஸ் பரவும் வேகம் கொஞ்ச நாளாகவே அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களில் நோய்ப்பரவல் 165% அதிகரித்திருக்கிறது. இது அச்சமளிக்கும் வேகம்... இது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என டாக்டர்களே சொல்கிறார்கள்.
தீவிரம்
அதனாலதான் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்டு 19 மாநிலங்கள் ஊரடங்கை செயல்படுத்தி வருகின்றன. தமிழகத்திலும் மக்கள் எவரும் வெளியில் வராத வண்ணம் தடுத்தால் தான் கொரோனா நோயை தடுக்க முடியும் என்பதால் தான், முழுமையான ஊரடங்கை செயல்படுத்த வேண்டும். பொது இடங்களில் மக்கள் கூடுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. ஐந்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூடுவதை மட்டும் தான் 144 தடை செய்கிறது. அதன்படி பார்த்தால் தமிழகத்தில் 5 பேர் வரை ஓரிடத்தில் கூட தடை இல்லை. இது எப்படி நோய் பரவுவதை கட்டுப்படுத்தும்?
நடைமுறை
கொரோனா பாதிக்கப்பட்டவரின் 3 அடி சுற்றளவில் ஒருவர் இருந்தாலும் அவருக்கும் இந்த நோய் தொற்றிக் கொள்ளும். இதைத் தடுக்க வேண்டுமானால் பொதுமக்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.,. முழுமையான ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.. 144 தடை சட்டத்தினால் ஓரளவு மட்டும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது நோய்ப்பரவலை தடுக்க உதவாது.
பொதுத்தேர்வு
மாணவர்களின் பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதுவரை ஏற்று கொள்ளப்படவில்லை. 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மொத்தம் 20 லட்சம் பேர் எழுதுகின்றனர். அவர்களுக்கு துணையாக வரும் பெற்றோர், தேர்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர் என இந்தத் தேர்வுகள் நடைபெறும் மையங்களில் மட்டும் சுமார் 50 லட்சம் பேர் கூடுவார்கள். இது கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவுவதற்கே வழி வகுக்கும்.
அதனால், பொதுத்தேர்வை ஒத்தி வைக்கவும், அத்துடன் வைரஸ் நோய் பரவுவதை தடுக்க முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது தான் ஒரே தீர்வுதான்" என்றும் அன்புமணி விவரித்து கோரிக்கை விடுத்துள்ளார்.