மேகதாது விவகாரம்... கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது...அன்புமணி கோரிக்கை
சென்னை: மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
காவிரி நடுவர் மன்றம், மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை தராமல் கர்நாடக அரசு ஏமாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட அனுமதி கோரி கடந்த ஜூன்மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திடம் கர்நாடக அரசு அனுமதி கோரியதாகவும், தமிழகத்தின் பலத்தை எதிர்ப்பை அடுத்து கர்நாடகாவின் கோரிக்கை அப்போது நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மேகதாதுவில் அணைகட்ட தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என கர்நாடக அரசு தெரிவித்திருப்பது, தவறான வாதம் என்றும், அதனை ஏற்க முடியாது எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் மேகதாதுவில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ள அன்புமணி, அந்த திட்டத்தை கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு புதிய அணைகள் கட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் பலமுறை உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், மத்திய அரசும் இதை பல்வேறு தருணங்களில் உறுதி செய்துள்ளதாகவும் அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார். அதனால், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கர்நாடகாவுக்கு வழங்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகளுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படும் என்றும், இதனை எண்ணிப்பார்த்து அணை கட்டும் திட்டத்தை கர்நாடக முதல்வர் எடியூரப்பா கைவிட வேண்டும் எனவும் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.