மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சந்திரபாபு நாயுடு வருகை.. கூட்டணி குறித்து முக்கியப் பேச்சு
Recommended Video
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் விதமாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மெகா கூட்டணி அமைக்கும் முயற்சிகளை முன்எடுத்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக சென்னையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.
2014 நாடாளுமன்ற தேர்தலின்போது, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகித்தது. ஆனால் உறுதியளித்தபடி ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்ற அதிருப்தியில் இருந்த தெலுங்குதேசம் பல முறை கூறியும் அந்த கோரிக்கையை பாஜக ஏற்பதாக தெரியவில்லை. இதனால் விரிசல் ஏற்பட்டு பா.ஜ.க. கூட்டணியை விட்டு தெலுங்கு தேசம் கட்சி வெளியே வந்தது.
இதனையடுத்து 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே, அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார்.
கடந்த வாரம் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியையும் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசி கூட்டணியை உறுதி செய்தார். நேற்று மாலை மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தேவேகவுடா மற்றும் குமாரசாமியையும் சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார்.
இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக சந்திரபாபு நாயுடு சென்னை வந்துள்ளார். ஆந்திராவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர் சாலை மார்க்கமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டிற்கு சென்று சந்தித்தார்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பின்போது, பா.ஜ.க.வுக்கு எதிராக கைகோர்த்து செயல்படுவது குறித்து மு.க.ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு கலந்து ஆலோசிக்கின்றனர். ஏற்கனவே டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்த பின்னர் சந்திரபாபு நாயுடு கூறிய கருத்தை ஸ்டாலின் வரவேற்றுள்ள நிலையில் கூட்டணி ஏற்படுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே தெரிகிறது.
சமீபத்தில் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார் சந்திரபாபு நாயுடு. நேற்று பெங்களூரில் முன்னாள் பிரதமர் தேவே கெளடாவைச் சந்தித்தார் நாயுடு. இன்று மு.க.ஸ்டாலினை அவர் சந்தித்துள்ளார்.
மு.க.ஸ்டாலினுடனான நாயுடு சந்திப்பின்போது திமுக தரப்பில் கனிமொழி, துரைமுருகன், ராசா உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.