புதுசா கல்யாணம் ஆச்சு சார்.. தெரியாம பண்ணிட்டேன்.. விமான நிலையத்தில் அழுத ஆந்திர பெண்!
சென்னை: சார்ஜா செல்லும் கணவரை வழியனுப்ப சென்னை விமான நிலையம் வந்த ஆந்திரா இளம்பெண் போலி விமான டிக்கெட் தயாரித்து, கணவரை விமானத்தில் அனுப்பி விட்டு வெளியே வந்த போது அங்கிருந்த போது பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கி கைது செய்யப்பட்டார்.
சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று சார்ஜா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் டிக்கெட் மற்றும் ஆவணங்களை போலீஸார் சரிபார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் நவாஸ் சேக் (25). அவரது மனைவி சனா (23). இருவரும் ஒரே பிஎன்ஆர்-இல் 2 பயணிகளுக்கான இ டிக்கெட்டை காண்பித்து விட்டு உள்ளே சென்றனர்.
பெண்
அதோடு பாதுகாப்பு சோதனை பகுதிகளுக்கும் இருவரும் ஒன்றாகவே அதே இ டிக்கெட்டை காட்டிச் சென்றனர். இந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு இளம்பெண் சனா மட்டுமே தனியாக வெளியே வர வந்தார். கேட்டில் நின்று கொண்டிருந்த சிஐஎஸ்எஃப் போலீஸார் அந்த பெண்ணை விசாரித்தனர்.
இளம்பெண்
அப்போது சனா தனது பயணத்தை ரத்து செய்துவிட்டதாக தெரிவித்தார். அத்துடன் வெளியே போகும் போது கேட்டில் இ டிக்கெட்டையும் காட்டினார். அந்த இ-டிக்கெட்டை பார்த்து சந்தேகமடைந்த போலீஸார் இளம்பெண்ணை வெளியே விடாமல் தீவிர விசாரணை நடத்தினர்.
சார்ஜா
அப்போது அவர் கூறுகையில் எனக்கும் எனது கணவருக்கும் அண்மையில்தான் திருமணம் ஆனது. எனது கணவர் வேலைக்காக சார்ஜா செல்கிறார். அவரை வழியனுப்ப நானும் அவருடன் சென்னை விமான நிலையம் வந்தேன். விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. எனவே எனது கணவரின் உண்மையான டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து அந்த ஜெராக்ஸ் டிக்கெட்டில் எனது பெயரையும் இணைத்து போலியான இ டிக்கெட் தயார் செய்து கொண்டு வந்தோம்.
விமான நிலையம்
அந்த போலி இ டிக்கெட்டை காட்டிதான் விமான நிலையத்திற்குள் பாதுகாப்பு சோதனை நடக்கும் பகுதி வரை ஒன்றாகவே சென்றோம். அதன் பின்னர் நானும் அவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தோம். அவர் தனது உண்மையான டிக்கெட் மூலம் விமானத்தில் சார்ஜாவிற்கு புறப்பட்டுச் சென்றார்.
இளம்பெண்
நான் அதே போலி இ டிக்கெட் மூலம் வெளியே வந்தேன். நான் செய்தது தவறு தான். மன்னித்துவிட்டுவிடுங்கள் என அழுதார். ஆனால் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் ஆந்திரா இளம்பெண்ணை கைது செய்து சென்னை விமான நிலைய போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் இளம் பெண்ணிடம் மேலும் விசாரணை நடத்தினர்.