ஜல்லிக்கட்டின் போது கொலை மிரட்டல்... விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மீது புகார்
Recommended Video
சென்னை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் போது கால்நடை மருத்துவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கால்நடை மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எஸ்.கே. மிட்டல் மற்றும் அவரது குழுவினர் மிரட்டல் விடுத்தனர் என்பது புகார் ஆகும். இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் தணிகைவேலு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பேசியதாவது:
மதுரை மாவட்டம் பாலமேட்டில் கடந்த 16ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முன்னதாக போட்டியில் பங்கேற்க வந்த காளைகளை கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது மத்திய கண்காணிப்பு குழு மற்றும் விலங்குகள் நல வாரிய உறுப்பினருமான எஸ்.கே. மிட்டல் , மருத்துவக்குழுவினரை கொன்று விடுவேன் என மிரட்டினார்.
அவருடைய செயலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். ஜல்லிக்கட்டு போட்டிகளை ஆய்வு செய்ய வரும் போது சொகுசு அறை, சொகுசு கார்கள் ஏற்பாடு செய்ய சொல்வதுடன், மருத்துவர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபடுகின்றனர்.
எனவே தமிழக அரசு எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குவதுடன், எஸ்.கே.மிட்டல் மற்றும் அவருடன் வந்த குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் மீது உரிய நடவடிக்கை இல்லையென்றால் ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது பணி புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.