பிக்பாஸ் வீட்டில் விஜயதசமி கலகலப்புக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்திய அனிதா
பிக்பாஸ் வீட்டில் விஜயதசமி நாளின் சிறப்பு நிகழ்ச்சியாக நான்கு மணி நேரம் ஒளிபரப்பானது. பண்டிகை நாளில் சந்தோஷங்கள் மட்டுமல்ல சண்டையும் சச்சரவுகளும் நிரம்பியதாகவே பிக்பாஸ் வீடு காணப்பட்டது.
சென்னை: பிக்பாஸ் வீட்டில் விஜயதசமி நாளின் சிறப்பு நிகழ்ச்சியாக நான்கு மணி நேரம் ஒளிபரப்பானது. பண்டிகை நாளில் சந்தோஷங்கள் மட்டுமல்ல சண்டையும் சச்சரவுகளும் நிரம்பியதாகவே பிக்பாஸ் வீடு காணப்பட்டது. அனிதா சுரேஷ் இடையே ஆரம்பம் முதலே முட்டிக்கொண்டாலும் பண்டிகை நாளான நேற்றும் சண்டை நடந்து கடைசியில் சமாதானம் ஆகாமலேயே முடிந்து போனது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 20 நாட்களுக்கும் மேலாக வீட்டில் உள்ளவர்கள் சண்டை, சச்சரவு, சமாதானம் என நகர்ந்து கொண்டிருக்கிறது. நான்கு வாரத்தில் நான்கு தலைவர்கள் வந்திருக்கிறார்கள் ஒரே ஒருவர் ரேகா மட்டும் வீட்டை விட்டு வெளியே போயிருக்கிறார்.
கட்டிபிடித்தல் முத்தல் கொடுத்தல் என நிறைய டச்சிங் டச்சிங் வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. புதிதாக காதல் ஜோடியும் இதோ அதோ என்று கண்ணாமூச்சி ஆடி வருகிறது.
பண்டிகை கொண்டாட்டம்
வழக்கமாக பிக்பாஸ் ஜூன் மாதம் தொடங்கியிருந்தால் விஜயதசமி நாளில் முடிவுக்கு வந்திருக்கும். இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியதால் விஜயதசமி, தீபாவளி, ஏன் புத்தாண்டு வரைக்கும் பலரும் பிக் பாஸ் வீட்டிற்குள்தான் இருப்பார்கள். பண்டிகையை மிஸ் செய்யக்கூடாதே என்பதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் கொண்டாடினார்கள்.
வர்ணம் தீட்டிய ஹவுஸ்மேட்ஸ்
பண்டிகை கொண்டாட்டத்தை அனிதா தொகுத்து வழங்கினார், வேல்முருகன் பாடல்கள் பாட, ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பொம்மைகளுக்கு அழகாக வர்ணம் பூசினர். நகரவாசிகள், கிராமவாசிகள் என தனித்தனியாக பிரிந்து போட்டிகளில் பங்கேற்றனர்.
கொலு பொம்மைகள்
ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரும் வண்ணம் பூசிய பொம்மையை கார்டன் ஏரியாவில் வரிசையாக அடுக்கி வைத்து தீபம் ஏற்றி பூஜை செய்தனர். பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த மண்பானையில் பெண்கள் அனைவரும் அரிசி போட்டு கடவுளை வணங்கினர்.
கண்களை குளமாக்கிய வேல்முருகன்
கார்டன் ஏரியாவில் நகரவாசிகளுக்கும் கிராமவாசிகளுக்கும் செவன்ஸ்டோன் என்ற போட்டி நடத்தப்பட்டது. அதில் நகரவாசிகளே வெற்றிபெற்றனர். பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும் பெண்களை பற்றி பெருமையாக பேச வேண்டும் என்று கூறினர். ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை முன் வைத்தனர். அதில் வேல்முருகன் அம்மா, மனைவி, மகள் என அனைவரைப் பற்றியும் பாடிய பாடல் ஹவுஸ்மேட்ஸ்களை மட்டுமல்லாமல் பார்வையாளர்களின் கண்களையும் குளமாக்கியது.
நடனத்தில் அசத்திய ஷிவானி
மேடைப்பேச்சில் கிராமவாசிகள் சார்பாக ஆரி கிராமத்தில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் நாட்டு மாடுகளின் சிறப்பை கூறினார். நகரவாசிகள் சார்பாக ரம்யா மற்றும் அனிதா இருவரும் நகரத்தில் இயல்பையும், சிறப்பையும் கூறினர். அதற்கடுத்து கேபிக்கும் ஷிவானிக்கும் இடையே நடனப்போட்டி நடைபெற்றது.
அசத்திய கிராமத்தினர்
நகரவாசிகள் அனைவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியையே நாடகமாக நடித்துக்காட்ட, கிராமவாசிகள் அனைவரும் கல்வியா? வீரமா? செல்வமா? என்பதை முன்னிறுத்தி துர்கை,லட்சுமி, சரஸ்வதி தனித்தனியாக இருப்பதை விட மூவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் மகிஷாசூரனை அழிக்கமுடியும் என்று நாடகமாக நடித்துக்காட்டி அனைவரின் மனங்களையும் கவர்ந்தனர்.
சண்டை இல்லாமல் எப்படி
என்னதான் பண்டிகை கொண்டாட்டம் என்று கலகலப்பாக நகர்ந்தாலும் கடைசியில் அனிதா கூறிய கருத்து ஒன்று சுரேஷ் மனதை காயப்படுத்த கோபப்பட்டு சண்டையாகிப் போனது. பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் அரை மனதோடு பங்கேற்றார். கடைசியில் அனிதா வந்து மன்னிப்பு கேட்டும் சமாதானம் ஆகாமலேயே நேற்றைய இரவு பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் உறங்கப்போனார்கள். அனிதா சுரேஷ் இடையே சண்டை நீடிக்குமா? இன்றைக்காவது சமாதானம் ஆவார்களா பார்க்கலாம்.