விடுதிகளை காலி பண்ணுங்க - மாணவர்களுக்கு அண்ணா பல்கலை நிர்வாகம் கடிதம்
விடுதி அறைகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் எழுதியுள்ளது. விடுதிகளை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க அண்ணா பல்கலைக்கழக நிர
சென்னை: விடுதிகளை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்றுவதற்கு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க விடுதி அறைகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் எழுதியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளும் கொரோனா முகாம்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
இந்த முகாம்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொரோனா சோதனை செய்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியை கொரோனா பரிசோதனை செய்தவர்களை தனிமைப்படுத்த பயன்படுத்த ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சமீபத்தில் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு கடிதம் எழுதியது
அதற்கு அண்ணா பல்கலைக்கழகம் மறுத்து விட்டது. மாணவர் விடுதியை உடனடியாக காலி செய்ய முடியாது என்றும் மாணவர்களின் பொருட்கள் அதில் இருப்பதால் பல மாணவர்கள் வெளியூர்களில் இருப்பதால் இரண்டு நாட்களில் ஒப்படைக்க முடியாது என்றும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் பதிலளித்தது.
அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியை ஒப்படைக்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது ஆராய்ச்சி மாணவர்களின் விடுதியையும் தனிமைப்படுத்தும் மையமாக மாற்றுவதற்கு 20 ஆம் தேதிக்குள் அதனை ஒப்படைக்கவேண்டும் என்று மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டது.
பல்கலைக்கழக விடுதியில் ஆராய்ச்சி மாணவர்களின் உடமைகள், ஆய்வு தொடர்பான பொருட்கள், ஆராய்ச்சி தொடர்பான கட்டுரைகள் இருப்பதால் அதனை அகற்றி ஒப்படைப்பது சற்று சிரமம் என்பதாலும், சில மாணவர்கள் விடுதியில் இருப்பதாலும் குறுகிய காலத்தில் ஒப்படைக்க முடியாது என்று அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மாநகராட்சியிடம் தெரிவித்தது.
இதனை ஏற்க மறுத்து விட்ட சென்னை மாநகராட்சி எப்படியாவது ஒப்படைக்க வேண்டும் என்று மீண்டும் அறிவுறுத்தியது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் விடுதிக்கு பதிலாக ஆடிட்டோரியத்தை தர முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது.
சென்னை, டெல்லி, மும்பையில் சூரிய கிரகணம் எப்போது நிகழும்?.. பகுதிவாரியாக விவரங்கள் இதோ..
இந்நிலையில் விடுதிகளை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க அண்ணா பல்கலைக்கழகம் சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால் விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் எழுதியுள்ளது.
மேலும், மாணவர்கள் பாதுகாப்பாக செல்வதற்கான வசதிகளை செய்யுமாறு மாநகராட்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் கொரோனா தொற்று முடிந்து விடுதிகளை திருப்பி அளிக்கும்போது மாணவர்கள் உடனடியாக உபயோகப்படுத்தும் வகையில் சுத்தப்படுத்தி தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.