புகழ் பெற்ற அண்ணா பல்கலையில் அதிர்ச்சி.. காசுக்காக செய்த காரியத்தால் பேராசிரியர்கள் சஸ்பெண்ட்
சென்னை: 2017-2018ம் ஆண்டு பருவத் தேர்வுகளில் விடைத்தாளில் மதிப்பெண்களை மாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டில் சிக்கி 4 பேராசிரியர்களை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதம் பருவத் தேர்வு நடந்தது. இதேபோல் 2018ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அரியர் தேர்வும் நடந்தது. இந்த தேர்வுகளில் விடைத்தாள்களில் மதிப்பெண்களை மாற்றிப்போட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக பேராசிரியர்கள் குழு ஆய்வு செய்தது. அந்த ஆய்வில், 20 அரியர்கள் வைத்திருந்த மாணவர்கள் சிலர் ஒரே முயற்சியில் அனைத்து பாடங்களிலும் சிறப்பான மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விடைத்தாள் திருத்துவதில் மோசடி நடத்திருப்பதை பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு பேராசிரியர்கள் குழு அறிக்கை அளித்தது.
அரசு பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் உருக்கமான வேண்டுகோள்
இது தொடர்பாக பேராசிரியர்களின் உயர்நிலை விசாரணைக் குழு அளித்த அறிக்கையில், 100க்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரு விடைத்தாளுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தி, விடைத்தாள்களை மாற்றி, மோசடியில் ஈடுபட்டிருந்தை குறிப்பிட்டு இருந்தனர்.
இதையடுத்து அதற்கு உடந்தையாக இருந்ததாக 37 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் முறைகேட்டில் சம்பந்தப்பட்ட 137 மாணவர்களின் பட்டமும் ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில், இந்த மோசடியில் தொடர்புடையதாக முன்னாள் துணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஸ்ரீநிவாசலு, பேராசிரியர்கள் செல்வமணி, குலோத்துங்கன் மற்றும் புகழேந்தி சுகுமாறன் ஆகிய 4 பேராசிரியர்களை பல்கலைக்கழக பதிவாளர் குமார் பணிஇடைநீக்கம் இன்று உத்தரவிட்டுள்ளார்.