அண்ணா பல்கலை இறுதி தேர்வு எழுத முடியாத மாணவர்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கை தேவை - மு.க.ஸ்டாலின்
அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் எந்த ஐயப்பாடும், குழப்பமுமின்றி தங்கள் இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுத உரிய ஏற்பாடுகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் இணையவழியாக நடத்திய முன்மாதிரித் தேர்வின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளைக் களைந்து, மாணவர்கள் எந்த ஐயப்பாடும், குழப்பமுமின்றி தங்கள் இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுத உரிய ஏற்பாடுகளை உடனே மேற்கொள்ள வேண்டும்; தேர்வு எழுத முடியாத மாணவர்களின் நலனைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை - அண்ணா பல்கலைக்கழகத்தின் இளநிலை மற்றும் முதுநிலைப் பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகளை, மாணவர்கள் 'ஆன்லைன்' மூலமாக எழுதுவதற்குப் பல்கலைக்கழகம் திட்டமிட்டிருக்கிறது.
அவ்வாறு மாணவர்கள் 'ஆன்லைன்' மூலம் இறுதித் தேர்வுகளை எழுதுவதற்கு முன்னோட்டமாக, மாதிரித் தேர்வுகளையும் (Mock Exams) 19-09-2020 அன்று நடத்தியிருக்கிறது. ஆனால், இதில் ஏராளமான தொழில்நுட்பக் குளறுபடிகள் ஏற்பட்டு, அதன் காரணமாக 'ஆன்லைன்' வாயிலான இறுதித் தேர்வுகள் எப்படி நடைபெறப் போகிறதோ என்பது குறித்து மாணவர்களிடையே பெரும் அச்சமும், பதற்ற மனப்பான்மையும் தற்போது உருவாகியுள்ளது.
அண்ணா பல்கலை... ஆன் லைன் தேர்வு விதிமுறைகள்... கீ போர்டு இல்லை... மவுசு மட்டும்தான்!!
மாதிரித் தேர்வின் போது பல்கலைக்கழகத்தின் இணையவழி நிழற்படக்கருவி (Web Camera), தேர்வு எழுதிய பல மாணவர்களைப் பதிவு செய்யத் தவறி இருக்கின்றது. ஒலி அமைப்பும் (Audio System) சரியாக வேலை செய்யாது இருந்திருக்கின்றது. இன்னும் ஒரு படி மேலே போய், பல மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத்தின் குறிப்பிட்ட அந்த வலைப்பக்கத்தில் லாக் இன் செய்ய இயலாமற் போயிருக்கின்றது.
இதன் விளைவாகப் பல மாணவர்கள் தேர்வே எழுத முடியாத நிலையும், அப்படி எழுதிய பல மாணவர்களும் கூடத் தேர்வு எழுதியதாகவே பதிவுசெய்யப்படாத சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கின்றது.