ஆன்லைன் தேர்வுகள்...என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது - அண்ணா பல்கலைக்கழகம் ஸ்டிரிக்ட் உத்தரவு
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை மாலை என இருவேளைகளில் தேர்வு நடைபெறும் என்று அட்டவணை வெளியிட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகாலமாகவே வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்றன. தேர்வுகள் அனைத்தும் நேரடியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரொனோ பரவல் காரணமாக இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்-லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அரசு கலைக் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
பிப்.1 முதல் ஆன்லைனில் கல்லூரி செமஸ்டர் தேர்வு! உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள்
கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் வழக்கமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். கொரொனோ பரவல் காரணமாக ஜனவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் மேலும் தள்ளிவைக்கப்பட்டு பிப்ரவரி முதல் வாரத்தில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்குகின்றன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே நேரடியாக தேர்வு நடத்தப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். அதன்படி பிஇ, பிடெக் மற்றும் பிஆர்க் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் அட்டவணை
பிப்ரவரி 1 முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை, மாலை என இருவேளைகளிலும் தேர்வுகள் நடைபெறும். பிப்ரவரி 1 முதல் தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பாடவாரியாக அட்டவணையை வெளியிட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து, மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என ஏற்கனவே உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரி நிர்வாகம் உறுதி செய்க
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு எவ்வாறு நடைபெறும் என்பது குறித்தும், அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களின் பதிவு எண்கள் மற்றும் இமெயில் ஐடி, செல்போன் எண் போன்ற விவரங்களை பதிவுசெய்ய வேண்டும். கல்லூரி நிர்வாகம் அதனை உறுதி செய்ய வேண்டும். கல்லூரியிலிருந்து அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தினை தொடர்புகொண்டு மாணவர்களின் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

ஹால் டிக்கெட் முக்கியம்
மாணவர்கள் தங்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இல்லாவிட்டால் மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படும். விடைத்தாள் திருத்தம் செய்யப்படாது.
மாணவர்கள் எழுத்துத் தேர்வினை ஒரே இடத்தில் அமர்ந்து எழுத வேண்டும்.

விடைத்தாள் திருத்தம் செய்யப்படாது
தேர்வில் சரியான விவரங்களை மாணவர்கள் தெரிவிக்காவிட்டால், அதுகுறித்து உடனடியாக விளக்கம் கேட்கப்படும்.
மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வினாத்தாளில் அனைத்து விவரங்களையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். விடைத்தாளில் தகவல்களை தவறாக பதிவு செய்தாலோ, சிறப்புக் குறியீடு ஏதாவது செய்திருந்தாலோ அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தம் செய்யப்படாது.

கல்லூரிகளுக்கு விடைத்தாள்கள்
மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தேர்வுகளில் பங்கேற்பார்கள். தேர்வு துவங்கும் நேரத்தில் மாணவர்களின் வாட்ஸ் அப் எண், மின்னஞ்சல், கூகுள் மீட் போன்றவற்றின் மூலம் வினாத்தாள்கள் அனுப்பப்படும். இதனையடுத்து மாணவர்கள் ஏ4 தாள்களில் விடைகளை எழுத வேண்டும். காலையில் 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலையில் 2.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் 3 மணி நேரம் தேர்வுகள் நடைபெறும். தேர்வு முடிந்த அடுத்த 1 மணி நேரத்தில் விடைத்தாள்களை மின்னஞ்சல், வாட்ஸ் அப் போன்றவற்றின் வாயிலாக கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

தபால் மூலம் அனுப்ப உத்தரவு
இவற்றை தேர்வுக்குரிய பாடங்களுக்கான பேராசியர்கள் கண்காணித்து விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யச்சொல்லி பெறுவர். அதேபோன்று மாணவர்கள் எழுதிய தேர்வுக்குரிய விடைத்தாள்களை ஒவ்வொரு பாடத்தேர்வும் முடிந்த 1 வார காலத்திற்குள் கூரியர் அல்லது தபால் வாயிலாக மாணவர்கள் பயிலும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும். அவ்வாறு அனுப்பத் தவறினால் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது.

ஒரே மாதிரி இருப்பது அவசியம்
மாணவர்கள் மின்னஞ்சல், வாட்ஸ் அப் வாயிலாக அனுப்பிய விடைத்தாள்களும், தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பப்பட்ட விடைத்தாள்களும் ஒன்றாக இருந்தால் மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு மேற்கொள்ளப்படும். மாணவர்கள் தங்களின் விபரங்களையும், வருகைப் பதிவினையும் https://student_attdetails.annauniv.edu என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.