பொறியியல் கல்லூரி பேராசிரியர்களின் கல்விச் சான்றுகளை ஒப்படைக்க பதிவாளர் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளின் பேராசிரியர்களின் கல்விச் சான்றுகளை ஒப்படைக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் பெரும்பாலானவை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. அவ்வாறு இயங்கி வரும் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஒரு உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவில் குறிப்பிடுகையில் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களின் கல்விச் சான்றுகளை ஒப்படைக்க வேண்டும். கல்விச் சான்றுகளை சரிபார்த்த பின் பேராசிரியரிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும்.
பேராசிரியர்களிடம் கல்விச் சான்றிதழ்களை கொடுக்காவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து பொறியியல் கல்லூரி முதல்வருக்கும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக முறைகேடுகள் பிரச்சினை எழுந்துள்ள நிலையில் பேராசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்க வேண்டும் என பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.