பகவத் கீதை.. முதல்வர் பழனிச்சாமியுடன் அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா அவசர ஆலோசனை
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா உடன் வியாழக்கிழமை மாலை ஆலோசனை நடத்தினார்.
பகவத் கீதை பாட விவகாரம் தொடர்பாக முதல்வரிடம் சூரப்பா விளக்கம் தந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த ஆலோசனையில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், செயலாளர் மங்கத் ராம் சர்மா ஆகியோரும் பங்கேற்று இருந்தனர்.
தத்துவவியல் பாடம்
சென்னை கிண்டி உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கும் குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி, ஏ.சி.டி, எஸ்.ஏ.பி, சி.இ.ஜி உள்ளிட்ட இடங்களில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கும் இந்தாண்டு முதல் தத்துவவியல் படிப்பும், அதில் பகவத் கீதை பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக பொறியியல் படிப்பின் 3-வது செமஸ்டரில் இந்தப் படிப்பு சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
சீமான் எதிர்ப்பு
இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலரும் பொறியியல் கல்லூரியில் பகவத்கீதையை பாடமாக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் சமூக வலைதளங்களிலும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள்.
சூரப்பா விளக்கம்
இதையடுத்து நேற்று மாலை விளக்கம் கொடுத்த சூரப்பா, இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் ஏற்கெனவே அதிக பாடங்களைப் படித்து வரும் நிலையில், அவர்களுக்குக் கூடுதல் சுமையைக் கொடுக்க விரும்பவில்லை என்றார்.
காட்டாயமில்லை
மேலும் கூறுகையில், தத்துவவியல், பகவத்கீதை உள்ளிட்ட பாடப்பிரிவுகள் விருப்ப பாடமாக வழங்கப்பட்டுள்ளது. விருப்பம் இருந்தால் மட்டுமே பகவத் கீதை தேர்ந்தெடுத்து படிக்கலாம். மற்றபடி கட்டாயம் கிடையாது. 12 பாடங்கள் உள்ளடங்கிய விருப்பப்பாட பட்டியலில் இருந்து மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய பாடத்தை தேர்வு செய்து கொள்ளலாம் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். சமஸ்கிருதம், மகாபாரதம் ஆகியவற்றை கட்டாயப்படுத்தியுள்ளதாக வெளியான தகவல் தவறு என்றார்.
சூரப்பா உடன் ஆலோசனை
இந்த சூழ்நிலையில் தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார், இந்த ஆலோசனையில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், செயலாளர் மங்கத் ராம் சர்மா ஆகியோரும் பங்கேற்றனர், இந்த கூட்டத்தில் பகவத் கீதை விவகாரம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறந்த கல்வி நிறுவனம் அங்கீகாரம் அளிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.