முன்னாடி ரௌடிகள்.. அப்புறம் முக்கிய தலைகள்.. "இப்போ இவங்க" - பாஜக போடும் பக்கா ஸ்கெட்ச்!
சென்னை: தி.மு.க உள்ளிட்ட பிற கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் மீது அதிருப்தியில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களை கட்சிக்கு இழுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது பாஜக.
பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல், அக்கட்சியில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து வருவது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
அதிர்ச்சி! வானிலிருந்து பறந்து வந்து.. குஜராத்தில் 3 இடத்தில் விழுந்த இரும்பு பந்துகள்! நடந்தது என்ன
திமுக ஆட்சி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளைக் கூறி செய்திகளில் இடம்பிடித்து வரும் அண்ணாமலை, பக்காவாக இன்னொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார்.
பாஜக
பா.ஜ.க தமிழகத்தில் வலுவாகக் காலூன்றும் முயற்சிகளை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. தமிழக மக்கள் மத்தியில் ஆதரவைப் பெறுவதற்காக கட்சியில் புது ரத்தம் பாய்ச்சி வருகின்றனர்.
வழக்கறிஞராகவும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகவும் இருந்த எல்.முருகனை பாஜக தலைவராக்கினர். பின்னர், கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்துவந்த அண்ணாமலையை அரசியலுக்கு கொண்டு வந்து தமிழக தலைவராக்கினர்.
ரவுடிகளை கட்சியில் சேர்த்து
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ரவுடிகளும் பாஜகவில் இணைந்து வந்தனர். மத்தியில் ஆட்சியில் இருப்பதை வைத்து அவர்களை வழக்குகளில் இருந்து காப்பாற்றுவதாகக் கூறி கட்சிக்கு வளைத்துக் கொண்டு வந்தது பா.ஜ.க.
புளியந்தோப்பு பெண் தாதா அஞ்சலை, கல்வெட்டு ரவி, புதுவை எழிலரசி, சீர்காழி சத்தியா, சேலம் முரளி என கூலிப்படை தாதாக்களை வரிசையாக கட்சியில் இணைத்து வந்தது பாஜக. இது கடுமையான விமர்சனங்களை கிளப்பியதால் எல்.முருகன் பின்னர் கொஞ்சம் அமைதி காத்தார்.
அண்ணாமலை
தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு 4 எம்.எல்.ஏக்கள் கிடைத்த நிலையில், அண்ணாமலை பாஜக தலைவரான பிறகு அக்கட்சியின் செயல்பாடுகளில் வேகம் கூடியுள்ளது. தி.மு.க அரசை எதிர்ப்பதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு டஃப் கொடுத்து வருகிறார் அண்ணாமலை.
தி.மு.க அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ள விஷயங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு அதைத் தொடர்ந்து பேசி கவனத்தை பெறுகிறார் அண்ணாமலை. இது ஆளுங்கட்சியினருக்கும் குடைச்சலாகவே மாறியுள்ளது.
முக்கிய பிரமுகர்கள்
தி.மு.கவின் முக்கிய பிரமுகர்களான முன்னாள் எம்.பியும், தி.மு.கவில் துணை பொதுச் செயலாளராக இருந்தவருமான வி.பி.துரைசாமி, எம்.எல்.ஏ கு.க.செல்வம் ஆகியோரை பா.ஜ.கவுக்கு இழுத்தனர். தொடர்ந்து, தி.மு.க, அ.தி.மு.கவில் பெரிய பொறுப்புகளில் இருந்த முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏக்கள் பலரையும் கட்சிக்குள் கொண்டு வந்தது பாஜக. அவர்களை வைத்தே, அக்கட்சிகளின் பலம், பலவீனங்களை அறிந்து தேர்தல்களை எதிர்கொள்ளவும், புதிதாக கட்சியில் ஆட்களைச் சேர்க்கவும் பாஜக காய்நகர்த்தி வருகிறது.
வாரிசுகளை குறிவைத்து
மேலும், தி.மு.கவின் முக்கிய பிரமுகர்களின் வாரிசுகளை தங்கள் பக்கம் இழுப்பதை முக்கிய பணியாகவே செய்து வருகின்றனர் பாஜகவினர். இதற்காகவே, மற்ற கட்சிகளில் அதிருப்தியில் உள்ளவர்களை கண்டறிய தனி டீமே அமைக்கப்பட்டுள்ளதாம்.
திமுக பொதுச் செயலாளராக இருந்த அன்பழகனின் பேரன் அன்புகிரியை தங்கள் பக்கம் இழுத்தது பா.ஜ.க. சமீபத்தில் தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவை கட்சியில் இணைத்து திமுகவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.
திமுகவுக்கு நெருக்கடி
திமுக மீது வாரிசு அரசியல் செய்வதாக குற்றம்சாட்டி வரும் பாஜக, திமுக பிரமுகர்களின் வாரிசுகளையே குறி வைத்து தூக்கி வருகிறது. திமுக மீது அதிருப்தியில் இருக்கும் அவர்களுக்கு நல்ல பதவி தருவதாக கூறி கட்சியில் இணைத்து, அவர்கள் மூலமாகவே திமுகவுக்கு குடைச்சல் கொடுக்கும் திட்டத்தை அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார். அது ஓரளவுக்கு அண்ணாமலைக்கு வெற்றியும் கொடுத்து வருகிறது.
அண்ணாமலை மாடல்
தான் மாநிலத் தலைவராக இருக்கும் காலத்தில் பாஜகவில் நலல் வளர்ச்சியை தலைமைக்கு காட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். மற்ற கட்சிகளில் செல்வாக்கு பெற்ற தலைவர்களையும், முக்கிய பிரமுகர்களின் வாரிசுகளையும் கட்சியில் இணைத்து அதுகுறித்த பேச்சுகளை பொதுவெளியில் கிளப்பிக் கொண்டே இருக்க வேண்டும் அதுவே கட்சிக்கு இலவச விளம்பரமாக இருக்கும் என்று கருதும் அண்ணாமலை அத்திட்டத்தையே தொடர்ச்சியாக செய்து வருகிறார்.
குடும்பத்தினர்
சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி முருகையாவின் மகன் எஸ்.ஜி.எம். ரமேஷை கட்சியில் இணைத்து திருவாரூரில் பெரிய ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி அனைவரின் புருவங்களையும் உயரச் செய்த அண்ணாமலை, தற்பொது தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், திமுக கூட்டணி சார்பில் எம்.எல்.ஏ ஆனவருமான வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி வேல்முருகன் மீது கடுப்பில் இருப்பதை அறிந்துகொண்டு பேசி கட்சிக்கு அழைத்து வந்திருக்கிறார். குடும்ப உறுப்பினர்களை இழுப்பதன் மூலம் ஆளுங்கட்சியான திமுகவுக்கு பயம் காட்ட அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.