சூப்பர்.. அமித்ஷாவின் கோரிக்கையை உடனே நிறைவேற்றியது மகிழ்ச்சி! திமுக அரசை பாராட்டிய அண்ணாமலை!
அமித்ஷா முன்வைத்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது மகிழச்சியை தருகிறது என அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்வைத்த மருத்துவம், சட்டம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி தாய்மொழியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டு நடைமுறைப்படுத்தியுள்ளது மகிழ்ச்சியை தருகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அண்மையில் கூட மருத்துவ நூல்களை தமிழில் வெளியிட்டுள்ளோம் என்று சமீபத்தில் பேசினார்.
இந்த பேச்சைக் குறிப்பிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
உச்சகட்ட எதிர்பார்ப்பு.. மோடி 2.O-ன் கடைசி முழு பட்ஜெட்! எப்போது தொடங்கும் நிர்மலா உரை? முழு விவரம்
தமிழில்
சென்னையில் நடைபெற்ற காது, மூக்கு தொண்டை நலன் குறித்த மருத்துவ அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார். அவர் பேசுகையில், கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சார்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் பாடத்திட்டம் தமிழில் தொடங்கப்பட்டது. இதனையடுத்து பாலிடெக்னிக் உள்ளிட்ட படிப்புகளும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு பயிற்றுக்குவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆங்கில திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.
மருத்துவப் படிப்பும் தமிழில்
இந்தநிலையில் மருத்துவ படிப்பும் தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாக இருந்தது.
குறிப்பாக இளநிலை மருத்துவப்படிப்பான எம்.பி.பி.எஸ் படிப்பு, மொத்தம் ஐந்தரை ஆண்டு கால படிப்பாகும், நான்கரை ஆண்டு பாடப்படிப்பும், ஓராண்டு பயிற்சியும் என மொத்தம் ஐந்தரை ஆண்டுகள் ஆகும். இந்த பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்கள் உடனடியாக ஆங்கிலத்தில் பாடங்களை கவனிப்பது சற்று சிரமமான நிலை இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவ பாடப்படிப்பை தமிழில் நடத்துவதற்கு ஏதுவாக புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதற்காக பேராசிரியர்களை கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
அண்ணாமலை வரவேற்பு
தமிழில் மருத்துவப் படிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நவம்பர் 12, 2022 அன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ் வழியில் மருத்துவக் கல்வியை பயிற்று மொழியாகத் தொடங்கினால், தமிழ் வழிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 14 மருத்துவ புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.
அமித்ஷா வேண்டுகோளை ஏற்ற திமுக அரசு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ENT மாநாட்டில் பேசுகையில், மருத்துவக் கல்வி புத்தகங்களை தமிழ்நாடு அரசு சமீபத்தில் தமிழில் வெளியிட்டுள்ளது என்று கூறியுள்ளார். தாய்மொழியில், மருத்துவம், சட்டம் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்று நமது உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் வேண்டுகோளை, தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செயல்படுத்த முனைவதில் மகிழ்ச்சியடைகிறோம்" என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.