கவலை வேண்டாம்.. மோடி பிரதமராக இருக்கும்போதே தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைவது நிச்சயம்.. அண்ணாமலை பஞ்ச்
சென்னை: பிரதமராக நரேந்திர மோடி இருக்கும்போதே தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்த பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, எந்த ஒரு தமிழனும் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல மோடியின் பாதுகாப்பு கண்டிப்பாகத் தேவை என்றும் தமிழக அரசியல்வாதிகள் கோபாலபுரத்தில் இருந்து வேண்டுமானாலும் go back modi என கூறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Recommended Video
பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் 7 ஆண்டுகள் சாதனைகளைக் கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் சாதனைகளை ஆவணப்படுத்தும் சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்பட்டது.
பிரதமர் மோடி தினந்தோறும் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.. ப.சிதம்பரம் கிண்டல்
புத்தகம் வெளியீடு
இந்த சிறப்பு மலர் இதழை பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இணைந்த நடிகர் சிவாஜி கணேசன் மகன் ராம்குமார் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "பிரதமர் மோடி ஆண்டு சாதனை மலர் புத்தகம் வீட்டில் பாதுகாப்பாக வைக்க வேண்டிய புத்தகம்.
கோபாலபுரத்தில் இருந்து 'Go Back Modi'
எந்த ஒரு தமிழனும் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல மோடியின் பாதுகாப்பு கண்டிப்பாக தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் கோபாலபுரத்தில் இருந்து வேண்டுமானாலும் 'Go Back Modi' எனக் கூறலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். அந்த சமயத்தில் அவரை 24 மணி நேரத்தில் விடுவிக்க வேண்டும் என இந்தியா கெடு விதித்தது. இதன் பின்னரே உடனடியாக அவர் வாகா எல்லைக்குக் கொண்டு வரப்பட்டார். இப்படிப் பல சம்பவங்களை என்னால் கூற முடியும்.
இந்தியா
இந்தியாவின் சட்டப்பிரிவு 370ஐ நீக்கப்பட்ட பின்னரே இந்தியா அமைதியான நாடாக மாறி உள்ளது. இந்தியாவைப் பாதுகாப்பாக்கும் ஒரு தலைவராகப் பிரதமர் மோடி உள்ளார். சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் நம்மைக் கண்ட பயப்படுகிறார்கள். புல்வாமா தாக்குதல் சமயத்தில் நமது நாட்டு வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். ஆனால், இந்தியா அதற்குத் தக்க பதிலடி கொடுத்து.
ஊழலற்ற நாடு
2014ஆம் ஆண்டு தேர்தலில் வென்று பிரதமர் நரேந்திர மோடி முதலில் ஆட்சிக்கு வந்த போது, இந்தியா ஊழல்வாதிகள் நிறைந்த ஒரு நாடாகச் சுத்தமாக எந்தவொரு செயல்பாடும் இல்லாமல் கிடந்தது. ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளில் நிலைமை மொத்தமாக மாறியுள்ளது. இப்போது வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் தாங்கள் இந்தியாவில் இருந்து சொல்லும் போது அங்கு அவர்களுக்குத் தக்க மரியாதை கிடைக்கிறதே இதற்கு ஒரு உதாரணம்.
பாஜக ஆட்சி அமைக்கும்
பிரதமராக நரேந்திர மோடி இருக்கும் போதே தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும். அதில் எந்தவொரு சந்தேகமும் வேண்டாம். தமிழ்நாட்டில் மிக விரைவில் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் பதவியில் அமரத்தான் போகிறார். அதைப் பிரதமர் மோடியே பார்க்கத்தான் போகிறார்" என்றும் அவர் கூறினார். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக 20 இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக வேட்பாளர்கள் தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.