எப்போது கைதாவார் ஜெயகோபால்... ஜாமீனில் வெளி வர முடியாத வழக்கும் பதிவு.. ஆளைத்தான் காணோம்!
அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது
Recommended Video
சென்னை: வசமாக மாட்டிக் கொண்டுள்ளார் பேனர் வைத்து மாயமாகி உள்ள ஜெயகோபால்.. ஜாமீனில் வெளியவே வர முடியாத பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துவிட்டார்கள்!
குரோம்பேட்டையை சேர்ந்த 23 வயது சுபஸ்ரீ உயிரிழக்க காரணமானவர் ஜெயகோபால். இவர் அதிமுக முன்னாள் கவுன்சிலர். மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும்கூட.
தன்னுடைய மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வழியெங்கும் பேனர்கள் வைத்திருந்ததுடன், சென்டர் மீடியனிலும் பேனரை விதிமீறி வைத்திருந்தார். இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான மனோஜை கைது செய்துவிட்டனர். பேனரை பிரிண்ட் செய்த அச்சகத்தாரை கூட விட்டு வைக்காத காவல்துறை, சம்பந்தப்பட்ட கவுன்சிலரை உடனடியாக கைது செய்யவில்லை.
இடையூறு
மதியானம் 2.30 மணிக்கு விபத்து நடந்த நிலையில், சாயங்காலம் 6 மணிக்குதான் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்படியே வழக்கு பதிவு செய்திருந்தாலும், அது எளிதில் ஜாமீனில் வெளியே வரக்கூடிய செக்ஷனில்தான் அதாவது பொதுமக்களுக்கு இடையூறு என்பதுபோலதான் போலீசார் கேஸ் பதிவு செய்தனர்.
கேள்விகள்
ஆனால் கோர்ட் இந்த விஷயத்தில் தலையிட்டதுமே, விஷயம் பெரிதானது. பேனர் வைக்க சொன்னவர்கள் மீது நடவடிக்கை இல்லையா? யாருக்காக பேனர் வைக்கப்பட்டது? அவர்கள் பெயர் வழக்கில் சேர்க்கப்படவில்லையா என நீதிபதிகள் கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.
உயிர்பலி
கோர்ட் கேட்ட கேள்வியை அடுத்து, ஜெயகோபாலின் பெயர் எப்ஐஆரில் சேர்க்கப்பட்டது. பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக வழக்கு ஒன்றும், பரங்கிமலையில் கவனக்குறைவாக உயிர் பலி ஏற்படுத்துதல் பிரிவில் டிராபிக் போலீஸ் சார்பில் ஒரு வழக்கும் பதியப்பட்டது.
விசாரணை
இதனால் எந்த நேரமும் கைது நடவடிக்கை பாயும் என்று எண்ணியோ என்னவோ, ஜெயகோபால் மாயமானார். 2 நாளாக எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை சிக்கவில்லை. சுபஸ்ரீ இறந்து இத்தனை நாள் ஆகியும், ஜெயபாலிடம் ஒரு விசாரணையும் நடத்தப்படாமலேயே உள்ளது.
இறுகும் பிடி
இந்தநிலையில் ஜெயகோபால் மீது இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மரணத்தை விளைவிக்கும் செயலை செய்தல் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜெய்கோபால் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 4-வது புதிய பிரிவு ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவராத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஜெயபால் மீதான பிடி இறுகி வருகிறது.. ஆனால் அவரைத்தான் இன்னும் காணவில்லை!