இதோ இன்னொரு புயல்ங்க.. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தை நோக்கி வருமாம்!
வங்க கடலில் மற்றொரு புயல் வர உள்ளது
சென்னை: தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் தாக்கம் அடங்குவதற்குள்ளாகவே, அடுத்த புயல் வர உள்ளதாக கூறப்பட்டது.. அதாவது நாளைய தினம் (29-ம் தேதி) தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
மேலும் அடுத்த 48-72 மணி நேரத்தில் தெற்கு வளைகுடாவில் புதிய குறைந்த அழுத்தம் உருவாகி மத்திய தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும், நவம்பர் 29 முதல் வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதால், மிக அதிக மழைப்பொழிவைப் பெற வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையமும் அறிவித்திருந்தது.
நவம்பர் 29-ம் தேதிக்கு பிறகு அடுத்தடுத்த நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து தென் தமிழக பகுதிகளை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகி உள்ளது.. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வுமையம் தற்போது கூறியுள்ளது.
தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 30-ம் தேதி (நாளை மறுதினம்) மேற்கு திசையில் தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக வரும் 1, 2 மற்றும் 3-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
அதிலும் தென் தமிழகத்தில் அதிகமாகவும், வட தமிழகத்தில் ஓரளவுக்கும் மழை இருக்கும் என்று தற்போதைய நிலவரப்படி கணிக்கப்பட்டு இருக்கிறது. தாழ்வு மண்டலத்தில் இருந்து அடுத்த நிலையான புயலுக்கு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே கணிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.