அதிமுகவிலிருந்து பாஜக எதிர்ப்பு குரல்... துணிந்த ரத்தத்தின் ரத்தங்கள்
சென்னை: கடந்த மூன்றாண்டுகளாக பாஜகவுக்கு எதிராக கருத்து கூறுவதை தவிர்த்து வந்த அதிமுக, இப்போது துணிந்து எதிர்ப்புக் குரலை பதிவு செய்ய தொடங்கியுள்ளது.
இதற்கு காரணம் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களே காரணம் எனக் கூறப்படுகிறது.
இனியும் பாஜக சார்பு அரசியல் செய்தால் அது அதிமுகவின் வாக்கு வங்கியை சேதாரமாக்கிவிடும் என கட்சியினர் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து நிலைப்பாட்டை மாற்றத் தொடங்கியுள்ளது அதிமுக தலைமை.
நோ கமெண்ட்
தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றது முதல் கடந்த மூன்றாண்டுகளாக பாஜகவுக்கு எதிராகவோ, மத்திய அரசுக்கு எதிராகவோ பெரியளவில் அதிமுக குரல் கொடுத்ததில்லை. ஜெயலலிதா எதிர்த்த பல திட்டங்களுக்கு கூட இப்போதைய அதிமுக அரசு அனுமதி அளித்தது.
இணையவில்லை
அதிமுகவும்-பாஜகவும் ஒரே கூட்டணியில் இருந்தாலும் இரண்டு கட்சிகளிலும் உள்ள நிர்வாகிகள் இடையே சரியான புரிதல் இல்லை. நாடாளுமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் என அனைத்திலும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் உரிய மரியாதை தரவில்லை என பாஜக நிர்வாகிகள் புகார் கூறியது குறிப்பிடத்தக்கது.
கடும் விமர்சனம்
இதனிடையே பாஜக தனித்து போட்டியிட்டிருந்தால் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என்றும், தீவிரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறி வருவதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது அதிமுக முகாமை கொந்தளிக்க வைத்துவிட்டது. இதன் வெளிபாடாகவே பொன்.ராதா என்ன விரக்தியில் இருக்கிறார் எனத் தெரியவில்லை என அவரை விமர்சித்து பேட்டி கொடுத்தார் அமைச்சர் ஜெயக்குமார்.
வலியுறுத்தல்
சரக்கு மற்றும் சேவை வரியில் தமிழகத்திற்கு வர வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.4,073 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு இதை வலியுறுத்தி ஸ்டாலின அறிக்கை விட்டிருந்தார். ஆனால் அப்போது சட்டைசெய்யாத அமைச்சர் ஜெயக்குமார் இப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுக்கிறார்.
இதன் மூலம் அதிமுக சொல்லவருவது என்னவென்பதை அரசியல் நோக்கர்கள் அறிவார்கள்.