Anti-CAA Protest LIVE: லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம்.. முதல்வர் அவசர ஆலோசனை
சென்னை: உயர்நீதிமன்ற தடையை மீறி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட, இன்னும் சற்று நேரத்தில் இஸ்லாமிய அமைப்புகள் பேரணியை துவக்க உள்ளதால் சென்னையில் கடும் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது, தமிழக இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கை. இதை வலியுறுத்தி, சென்னை வண்ணாரப்பேட்டையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல், ஆண்களும், பெண்களும் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வெள்ளிக்கிழமை இரவு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதால் பெரும் பதற்றம் உருவானது. தற்போது தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எனவே இந்த கூட்டத்தொடரிலேயே, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்துகின்றன. இதை வலியுறுத்தி, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திலிருந்து இன்னும் சற்று நேரத்தில் சட்டசபையை முற்றுகையிடும் போராட்டத்தில் பங்கேற்க, இஸ்லாமிய அமைப்புகளின் ஊர்வலம் துவங்க உள்ளது.