பத்திரப்பதிவு அலுவலகங்களில் விடிய விடிய ரெய்டு.. கட்டுக்கட்டாக சிக்கிய பணம்... அதிகாரிகள் ஷாக்
சென்னை: தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லஞ்சம் வாங்கி கொண்டு முறைகேடாக பத்திரங்களை பதிவு செய்து கொடுப்பதாக புகார்கள் அதிகரித்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் நேற்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
சேலம் மாவட்டம் சூரமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது கணக்கில் வராத ரூ.2.35 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.. நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு முழுவதும் நடந்தது.
புரோக்கர் தப்பிஓட்டம்
சென்னை நீலாங்கரையில், கஜுரா கார்டன், 2வது தெருவில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று பிற்பகல் 2 மணியிலிருந்து, டிஎஸ்பி தலைமையில் 3 ஏ.டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது, ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அலுவலகத்தில் இருந்து 2.4 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அதிகாரிகளுக்கு புரோக்கராக செயல்பட்ட பிரபு என்பவர் ₹10 லட்சம் பணத்துடன் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
5 மணி நேரம் ரெய்டு
இதேபோல் பல்லாவரம் அடுத்த பம்மல், திருநீர்மலை செல்லும் பிரதான சாலை காமராஜர்புரத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது இங்கு நேற்று டிஎஸ்பி பாஸ்கர் தலைமையில் 8க்கும் மேற்பட்ட விஜிலென்ஸ் அதிகாரிகள் திடீரென வந்து கதவுகளை பூட்டி ஆய்வில் ஈடுபட்டனர். இதனால் உள்ளே இருந்து ஊழியர்கள் வெளியேறவும், வெளியில் இருந்து பொதுமக்கள் அலுவலகத்தின் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டது. இரவு வரை சுமார் 5 மணி நேரம் நடந்த சோதனையில், கணக்கில் வராத 12 ஆயிரம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
ஆரணியில் ரெய்டு
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணிக்கு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சென்று சோதனை நடத்தினர், கணக்கில் வராத பணம் உள்ளிட்டவை குறித்து விசாரித்தனர். இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சார்பதிவாளர் அலுவலகத்திலும் சோதனை நடந்தது. அதில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்து சப்-ரிஜிஸ்திரார் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்
ஓசூர் சோதனைச்சாவடி
இதனைபோல், நாமக்கல் நகர ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர். வீடு மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி பெற லஞ்சம் கேட்பதாக வந்த புகாரை அடுத்து சோதனை நடந்தது. அப்போது, கணக்கில் வராத ரூ.5.25 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒசூர் சிப்காட் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு கணக்கில் வராத ரூ.2.14 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை அதிகாரி
ஈரோட்டில் பொதுப்பணித்துறை உதவி இயக்குநர் மகேஷ் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அங்கு 30 லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மகேஷ்பாண்டியனின் சொந்த ஊரான தேனியில் உள்ள வீட்டிலும் சோதனை நடந்தது.. மாநிலம் முழுவதும் 7 பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.