விவசாய விரோத, இடஒதுக்கீட்டிற்கு எதிரான பாஜக அரசுதான் ஊழல் அதிமுக அரசுக்கு பாதுகாவலன்: மு.க.ஸ்டாலின்
சென்னை: விவசாய விரோத, இடஒதுக்கீட்டிற்கு எதிரான பாஜக அரசுதான் ஊழல் அதிமுக அரசுக்கு பாதுகாவலன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனாவில் கொள்ளையடிக்கும் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் வேலை இழந்திருக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் வருமானத்தை இழந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு 5000 ரூபாய் ரொக்கமாகக் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தோம். கேட்கவில்லை இந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
நெல் கொள்முதல் விவகாரம்
அறுவடை செய்த நெல் மழையில் அழிந்து போகிறது - நெல்லை வாங்க நேரடி கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்கவில்லை. நெல்லுக்குரிய விலையும் கொடுக்கவில்லை. குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட உயர்த்திக் கொடுக்க முதலமைச்சர் பழனிசாமிக்கு மனமில்லை. சன்ன ரக நெல், குவிண்டால் ஒன்றுக்கு 1,958 ரூபாய் சாதாரண ரக நெல்லுக்கு, 1,918 ரூபாய். இந்த விலை எப்படி கட்டுப்படியாகும்?
மத்திய அரசின் விவசாய சட்டங்கள்
நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால் அதுபற்றி முதலமைச்சர் கண்டுகொள்ளவே இல்லை. அதேநேரத்தில் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச விலையையும் ரத்து செய்யும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்திருக்கிறது அ.தி.மு.க. இன்றைக்கு அந்த மூன்று சட்டங்களையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வழக்குத் தொடுத்திருக்கிறது. அந்த வழக்கினை ஏற்றுக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம் "இதற்குப் பதில் சொல்லுங்கள்" என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இடஒதுக்கீடு விவகாரம்
ஆனால் அ.தி.மு.க.-வுக்கு, அந்த வழக்குகளில் தன்னையும் ஒரு பார்ட்டியாக சேர்த்துக் கொள்ளக் கூட தைரியம் இல்லை. அப்படி வழக்குத் தொடுத்தால் பழனிசாமி வீட்டில் ரெய்டு நடக்கும். இங்குள்ள அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு நடக்கும். ஏன், வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு வீட்டிலும் ரெய்டு நடக்கும். ரெய்டுகளுக்குப் பயந்து - விவசாயிகளின் நலனை மத்திய பா.ஜ.க. அரசிடம் அடகு வைத்துள்ள அரசு - பழனிசாமி அரசு. நேற்றைக்குக் கூட பாருங்கள். மருத்துவம் மற்றும் மருத்துவ மேல் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துவிட்டது. இந்த ஆண்டே இந்த ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
27% இடஒதுக்கீடும் இல்லையாம்
நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது - மத்திய பா.ஜ.க. அரசு இந்த ஆண்டு 27 சதவீதமும் கொடுக்க முடியாது; 50 சதவீதமும் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டது. இந்த ஆண்டே இடஒதுக்கீட்டை கொடுங்கள் என்று தி.மு.க. மூத்த வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதையும் ஏற்க மத்திய பா.ஜ.க. அரசு மறுத்து விட்டது. இன்னொரு செய்தி வந்திருக்கிறது. பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டிலிருந்து 10 சதவீதத்தை எடுத்து முன்னேறிய வகுப்பினருக்குக் கொடுத்திருக்கிறார்கள். வங்கிப் பணியாளர் தேர்வில் இந்த அநியாயம் நடந்திருக்கிறது. மத்திய சட்டப் பல்கலைக்கழகத்தில் 27 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க முடியாது என்கிறார்கள். மத்திய அரசுப் பணிகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்த முடியாது என்கிறார்கள்.
அதிமுக அரசை பாதுகாக்கும் பாஜக
பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினத்தவரை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆக விடாமல் தடுக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் தட்டிக் கேட்க மறந்து - "கமிஷன், கலெக்சன், கரெப்ஷனில்" மூழ்கிக் கிடக்கிறது அ.தி.மு.க. அரசு. இடஒதுக்கீட்டிற்கு எதிரான மத்திய பா.ஜ.க. அரசு. விவசாயிகளுக்கு எதிரான மத்திய பா.ஜ.க. அரசு - இது டெல்லியில். இடஒதுக்கீடு உரிமை பறிபோவதைத் தட்டிக் கேட்க முடியாமல் - விவசாயிகள் விரோத திட்டங்களை ஆதரிக்கும் அரசு அ.தி.மு.க. அரசு - இது தமிழகத்தில்! ஆகவே விவசாய விரோத, இடஒதுக்கீட்டிற்கு எதிரான பா.ஜ.க. அரசுதான், அ.தி.மு.க. என்ற ஊழல் அரசுக்கு பாதுகாவலன்; விசுவாசமிக்க பாதுகாவலன்! இந்த விவசாய விரோத, இடஒதுக்கீட்டிற்கு எதிரான பா.ஜ.க. அரசையும் - "விவசாயி" "விவசாயி" என்று சொல்லிக் கொண்டே விவசாயிகளுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடும் அ.தி.மு.க. அரசையும் விரட்டி அடிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.