சினிமா நட்சத்திரங்களின் டி சர்ட் எதிரொலி- சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கானது #ஹிந்தி_தெரியாது_போடா
சென்னை: சமூக வலைதளங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக #ஹிந்தி_தெரியாது_போடா.. என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது.
Recommended Video
திமுக லோக்சபா எம்.பி. கனிமொழியிடம், இந்தி தெரியாததால் நீங்க இந்தியரா? என சென்னை விமான நிலைய மத்திய தொழிலகப் பாதுகாப்பு அதிகாரி கேள்வி கேட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதமானது. இதனை தொடர்ந்து அண்மையில் திரைப்பட இயக்குநர் வெற்றி மாறனும் தமக்கும் இதேபோல் அனுபவம் ஏற்பட்டதாகவும் இந்தி தெரியாது என்று சொன்ன ஒரேகாரணத்துக்காக தாம் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
"ஐ யம் எ தமிழ் பேசும் இந்தியன்".. பரபரப்பை கிளப்பிய யுவன், சாந்தானு டி ஷர்ட்.. கனிமொழி பாராட்டு!
நட்சத்திரங்களின் டி சர்ட்
இந்நிலையில் சினிமா நட்சத்திரங்களான யுவன் சங்கர் ராஜா, சாந்தனு, சிரீஷ் உள்ளிட்டோர் இந்தி திணிப்புக்கு எதிரான டி சர்ட்டுகளை அணிந்து சமூக வலைதளங்களில் படங்களை வெளியிட்டனர். அதில் ஐ யம் எ தமிழ் பேசும் இந்தியன், இந்தி தெரியாது போடா என இந்தி திணிப்புக்கு எதிரான வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இதை கனிமொழி பாராட்டியும் இருந்தார்.
டிரெண்டிங் ஹேஷ்டேக்
இந்தி திணிப்புக்கு எதிரான திரை உலகத்தினரின் இந்த டீ சர்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி ஹாட்டாபிக்காக மாறியது. அத்துடன் சமூக வலைதளங்களில் #ஹிந்தி_தெரியாது_போடா.. என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கானது. ட்விட்டரில் இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் முதலிடமும் பிடித்தது. #ஹிந்தி_தெரியாது_போடா.. என்ற ஹேஷ்டேக்கில் இந்தி திணிப்புக்கு எதிராகவும் இந்தி கற்றுக் கொள்ளுதல் சரியானதே என ஆதரவாகவும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டும் வருகின்றன.
இந்தியில் எதுவும் இல்லை
@prakash_prakkii என்ற ட்விட்டீஸ் இந்தி குறித்த பெரியாரின் மேற்கோளை பதிவிட்டுள்ளார். அதில், இந்தியில் கலை இல்லை; காவியல் இல்லை; நீதி நூல்கள் இல்லை; 100க்கு 97 பேர் விரும்பாத மொழி ஏன் இங்கு புகுத்தப்பட வேண்டும்? என பெரியார் கேள்வி எழுப்பியுள்ளார்.
திணிக்காதீங்க
@LkLakshmanan என்ற பதிவர், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் சமூக இடைவெளிக்கான படத்தை பதிவிட்டு, எந்த ஒரு மொழியையும் யார் ஒருவர் மீதும் திணிக்கக் கூடாது; மொழியை கற்பது ஒரு வாய்ப்பு மட்டுமே என கூறியுள்ளார்.
எல்லாமும் ஆங்கிலத்தால்தான்
@Kings84582072 என்ற ட்வீட்டிஸ்ட், ஆங்கிலம்தான் ஏராளமான வேலைவாய்ப்புகளை நமக்குக் கொடுத்திருக்கிறது. பானிபூரி விற்பதைத் தவிர இந்தியால் வேறு என்ன செய்ய முடிந்தது? என கோபமாக கேட்டிருக்கிறார்.