ஒரு சீட்டுக்கு பெரும் அடிதடி.. ராஜ்யசபா தேர்தலிலாவது அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
அன்வர் ராஜாவுக்கு ராஜ்ய சபாவில் வாய்ப்பு தரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: "எம்பி தேர்தலில்தான் வாய்ப்பு தரலை.. எப்படியாவது என்னை ராஜ்ய சபாவுக்கு அனுப்பிடுங்க.. கட்சிக்கு விசுவாசமா இருப்பேன்" என்று முன்னாள் எம்பி அன்வர்ராஜா எடப்பாடி தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளாராம்!
முத்தலாக் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் "இந்த சட்டம் காட்டுமிராண்டித்தனமானது, இறைவனுக்கு எதிரானது" என்று உயர்த்தி குரல் கொடுத்தவர்தான் அன்வர் ராஜா.
இதன்பிறகு தேர்தல் காலகட்டம் வந்தது. தன் ஊரிலேயே நின்று தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஒருநாள் திடீரென யாகம் வளர்த்தார். இஸ்லாமிய மரபுகளுக்கு எதிராக செயல்பட்டதாக பல்வேறு தரப்பினரையும் கூட அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அன்வர் ராஜாவை உடனே வக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்து தமிழக அரசு நீக்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக அவருக்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டது.
தற்காலிக ஏற்பாடு
பின்னர், பாஜக-அதிமுக கூட்டணி முடிவானது. இதுகுறித்து பாஜகவை தொடர்ந்து எதிர்த்து வந்த அன்வர் ராஜாவிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு, "தமிழகத்தில் ஆட்சியை தக்க வைக்கத்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். தேர்தலுக்கான தற்காலிக ஏற்பாடுதான்" என்று அப்பட்டமாகவே சொன்னார்.
கூச்சலிட்ட மக்கள்
இப்படி தொடர்ந்து மாறி மாறி சர்ச்சை ஏற்படுத்தி வரும் அன்வர் ராஜாவினால் அதிருப்திகள்தான் ஏற்பட தொடங்கின. ஒருநாள் தொகுதிக்குள் காரில் சென்று இறங்கியபோதுகூட, "எப்படி பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்? இங்க எதுக்கு வர்றீங்க, அப்படியே கிளம்பி போயிடுங்க.. கட்சியில சீனியர்னு இருக்கிறவரைக்குதான் மரியாதை தருவோம்" என்று கத்தி கூச்சலிட்டனர் பொதுமக்கள்!
அமைச்சர் மணிகண்டன்
இதனிடையே ராமநாதபுரத்தில் சீட் வாங்குவதில் கட்சிக்குள் பஞ்சாயத்து ஆரம்பமானது. அன்வர் ராஜாவுக்கும், அமைச்சர் மணிகண்டனுக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. அது மட்டுமின்றி இருவருமே இந்த தொகுதியில் போட்டியிட அதிமுகவை நெருக்கி கொண்டிருந்தார்கள். இந்த கோஷ்டி பூசலை பார்த்து அரண்ட அதிமுக, பேசாமல் ரெண்டு பேருக்கும் சீட் தராமல், கூட்டணி கட்சியான பாஜகவுக்கே தொகுதியை ஒதுக்கலாம் என அதிமுக முடிவு செய்துதான் நயினார் நாகேந்திரனுக்கு ஒதுக்கியது.
விண்ணப்ப கடிதம்
இந்த சமயத்தில்தான், "இஸ்லாமியர்கள் மிக அதிகமாக வாழ்கின்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் ராஜ்யசபா உறுப்பினர் ஆகும் வாய்ப்பு நம்முடைய கட்சியில் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. அதனால் வரும் ஜூன் மாத இறுதியில் ராஜ்யசபா உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை எனக்கு வழங்கிட வேண்டும்" என்று அதிமுக தலைமையிடம் விண்ணப்ப கடிதமே ஒன்று கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
வாய்ப்பு கிடைக்குமா?
இப்போதைய சூழலில் அதிமுகவினால் 3 ராஜ்யசபா உறுப்பினர்களைதான் தேர்ந்தெடுக்க முடியும். இதில், ஒன்று அன்புமணி ராமதாசுக்கு என்றும் மற்றொன்று கூட்டணி கட்சியான பாஜகவுக்கும் என்றும் கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது அதிமுக சார்பில் ஒருத்தருக்குதான் வாய்ப்பு இருக்கும். அந்த ஒருத்தருக்கும் நிறைய போட்டா போட்டிகள் உள்ளது. இதில் அன்வர்ராஜாவின் கோரிக்கை எந்த அளவுக்கு எடுபடும் என தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்!