என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. காங். உடன் கூட்டணி வைக்க அதிமுக திட்டமா? ஜெயக்குமார் பரபர பதில்!
அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்திடுமா? என்று இப்போது கூற முடியாது. ஆனால் நாளை எதுவானாலும் நடக்கலாம் என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்திடுமா? என்று இப்போது கூற முடியாது. ஆனால் நாளை எதுவானாலும் நடக்கலாம் என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும் என்ற நிலையில் இருக்கிறது. இரண்டு கட்சியை சேர்ந்த தலைவர்களும் தீவிரமாக மாறி மாறி விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் அதிமுக - பாஜக இடையிலும் சில வார்த்தை மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. பாஜகவிற்கு புதிய தமிழக தலைமை வந்த பின் இந்த சண்டை விஸ்வரூபம் எடுக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
என்ன கருத்து
இந்த நிலையில் காங்கிரஸ் - திமுக சண்டை குறித்து, அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அதில், காங்கிரஸ் கட்சி தன்மானத்தோடு இருப்பது குறித்து அக்கட்சியே முடிவெடுக்கும். காங்கிரஸ் கட்சி சிந்தித்து செயல்பட வேண்டும். திமுக கூட்டணி குறித்து எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, உண்மையாக செயல்பட்டு காங்கிரஸ் கட்சி முடிவு எடுக்க வேண்டும்.
எப்படி கூட்டணி
அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்திடுமா? என்று இப்போது கூற முடியாது. ஆனால் அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். எப்படி வேண்டுமானாலும் மாற்றங்கள் வரலாம். நாளை எதுவானாலும் நடக்கலாம் என்று ஜெயக்குமார் கூறினார்.
என்ன சண்டை
ஏற்கனவே கடந்த சில நாட்களாக அதிமுக - பாஜக இடையே சண்டை நடந்து வருகிறது. பாஜக முன்னாள் எம்பி, முன்னாள் தலைவர் பொன். ராதாகிருஷ்ணனை அதிமுக தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள். முதல்வர் பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் கூட, பொன். ராதாகிருஷ்ணனை விமர்சித்து வருகிறார்கள்.
பாஜக நிலை
பாஜகவை சேர்ந்த தலைவர்களும் அதிமுக ஆட்சி சரியில்லை. வன்முறை அதிகரித்துவிட்டது என்றெல்லாம் விமர்சனம் வைத்து வருகிறார்கள். இதனால் அதிமுக -பாஜக கூட்டணி உடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு மத்தியில்தான் காங்கிரஸ் உடன் கூட்டணி குறித்த கேள்விக்கு ''என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்'' என்று பதில் அளித்து ஜெயக்குமார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.