மீடியாவிற்கு ரூ.48.43 லட்சம்.. அப்பல்லோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Recommended Video
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உணவு செலவாக ரூ.1.17 கோடி செலவிடப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை வழங்கிய கணக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், உணவு செலவு எதற்காகவெல்லாம் செலவிடப்பட்டது என்று பிரித்தும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள ஒரு தகவல் இன்னும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் அப்பல்லோ வழங்கியுள்ள இந்த கணக்கு வழக்குகளை பார்த்தால், "இது என்னடா குமாரசாமி (முருகன்) உனக்கு வந்த சோதனை.." என்று தலையில் மக்கள் அடித்துக்கொள்கிறார்கள்.
பிற உணவுகள்
ஆம்.. அப்படித்தான் உள்ளது கணக்கு விவரம். நோயாளியாக அட்மிட் செய்யப்பட்ட ஒருவர் 1 கோடி ரூபாய்க்கு சாப்பிட்டிருக்க முடியாது என்ற வாதம் எழுந்த நிலையில், அது ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட உணவுக்கான செலவு மட்டும் கிடையாது. அவர் மருத்துவமனையில் இருந்தபோது, அது சார்ந்து செலவிடப்பட்ட உணவு தொகை என்ற பிரேக்-அப் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பத்திரிகையாளர் சாப்பாடு
அதில் ஒரு தகவல் என்னவென்றால், மீடியாக்களுக்கு ரூ.48.43 லட்சம் செலவிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட சாப்பாட்டு செலவு என்பது இதன் அர்த்தமாகும்.
ரகசிய சிகிச்சை
ஆனால், அப்பல்லோ மெயின் கேட்டுக்கு உள்ளே எந்த பத்திரிகையாளரையும் போலீஸ் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா சிகிச்சை நடைமுறை மிகுந்த ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அப்படியிருக்கும்போது பத்திரிகையாளர்களுக்கு இவ்வளவு செலவிட்டதாக கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாப்பாடு தரவில்லை
இதுகுறித்து ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது மருத்துவமனை வெளியே ஷிப்ட் முறையில் பணியாற்றிய பத்திரிகையாளர்கள் கூறுகையில், 75 நாட்களுமே அப்பல்லோ மருத்துவமனைக்குள் எங்களை அனுமதிக்கவில்லை. எங்களுக்கு யாரும் உணவு தரவில்லை. சொந்த பணத்தை செலவிட்டு அருகேயுள்ள ஹோட்டல்களில் சென்று சாப்பிட்டு வந்தோம். இவ்வாறு அவர்கள் தெரிவிக்கிறார்கள்.