நாங்கள் தவறு செய்யவில்லை.. குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை.. அப்பல்லோ மருத்துவமனை பரபர அறிக்கை
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் தங்கள் மீது தவறுதலாக புகார் அளித்து இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை குற்றச்சாட்டு வைத்துள்ளது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் தங்கள் மீது தவறுதலாக புகார் அளித்து இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை குற்றச்சாட்டு வைத்துள்ளது.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாள்கள் அங்கு சிகிச்சை மேற்கொண்ட அவர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்துவிட்டார்.
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் முன்னாள் தலைமை செயலாளர் உட்பட பலரிடமும் விசாரணை செய்து வருகிறது.
மனு தாக்கல்
இந்த நிலையில் தற்போது இந்த விசாரணை ஆணையத்தின் முன், ஆணையத்தின் வழக்கறிஞர் முகமது கபருல்லா கான் முக்கியமான மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அப்பல்லோவிற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை முறையில் நிறைய தவறுகள் இருப்பதாக இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
என்ன தவறு
அதில், அப்பல்லோ மருத்துவமனை ஜெயலலிதாவிற்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை. அவருக்கு ஆஞ்சியோ செய்யாமல் மருத்துவர்கள் தவறிழைத்து இருக்கிறார்கள். ஆஞ்சியோ செய்ய தேவையான சூழ்நிலை நிலவியும் கூட, அவருக்கு ஆஞ்சியோ செய்யப்படவில்லை. அதேபோல் போதுமான மருத்துவம வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுக்கவில்லை என்று நிறைய குற்றச்சாட்டுகளை செய்து இருக்கிறார்கள்.
அப்பல்லோ பதில்
இதற்கு தற்போது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் பதில் அளித்து இருக்கிறது. அதில், ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ செய்வதற்கான தேவை ஏற்படவில்லை. ஒரே ஒரு மருத்துவர்தான் ஆஞ்சியோ செய்ய வேண்டும் என்று கூறினார். பெரும்பான்மை மருத்துவர்கள் ஆஞ்சியோ தேவையில்லை என்றுதான் கூறினார்கள். அதேபோல் எய்ம்ஸ் மருத்துவர்களும் ஆஞ்சியோ தேவையில்லை என்றனர்.
விசாரணை தவறு
ஆணையத்தின் விசாரணையில் நிறைய தவறு இருக்கிறது. மருத்துவ பெயர்கள் விவரங்கள் இதில் தவறாக உள்ளது. இதனால் மருத்துவ குழு ஒன்றுதான் இந்த விசாரணையை செய்ய வேண்டும். எங்கள் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ஆணையம் இந்த குற்றச்சாட்டுகளை திரும்ப பெற வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை கூறியுள்ளது.