75 நாள் சிகிச்சை.. ஜெயலலிதாவுக்கான சிகிச்சை பில் ரூ. 7 கோடி.. அதிர வைக்கும் அப்பல்லோ தகவல்
ஜெயலலிதாவுக்கு ஆன மருத்துவ செலவுகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு ரூ.6.85 கோடி செலவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ நிர்வாகம் இந்த தகவலை புள்ளி விவரத்துடன் அளித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளது.
அதன்படி, இந்த ஆணையத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது சகோதரர் ஜெ.தீபக் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி, சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆணையம் விசாரணை
அதேபோல, ஜெயலலிதா கடைசியாக சிகிச்சை பெற்று வந்த அப்போலோ மருத்துவமனையிடமும் விசாரித்து வந்தது. இதற்காக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஊழியர்கள், டெக்னிஷியன்கள் என அனைவரிடமும் ஆணையம் விசாரணை மேற்கொண்டது.
லண்டன் டாக்டர்
தற்போது ஜெயலலிதா மேற்கொண்ட சிகிச்சைக்கு ஆன செலவு குறித்து மருத்துவமனை ஆணையத்திடம் விளக்கமாக எடுத்துரைத்துள்ளது. அதன்படி, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு ரூ.92.7 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
பிசியோதெரப்பி
பிசியோதெரப்பி சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு ரூ.1.29 கோடி வழங்கப்பட்டதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வார்டுக்கான 75 நாள் வாடகை மட்டும் ரூ. 24 லட்சம் என்று தெரியவந்துள்ளது.
சசிகலா
அது மட்டும் இல்லை, கடைசி நாள் வரை கூடவே இருந்து ஜெயலலிதாவை கவனித்துக்கொண்ட சசிகலா குடும்பம் தங்கிய அறை வாடகை ரூ. 1.24 கோடி என்றும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது உணவுக்கான செலவு மட்டும் ரூ. 1.17 கோடி எனவும் அப்பல்லோ மருத்துவமனை தகவல் அளித்துள்ளது.
75 நாள் செலவு
மொத்தத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா தங்கியிருந்த 75 நாட்களுக்கு ஜெயலலிதா சிகிச்சைக்கு ரூ.6.85 கோடி செலவு செய்யப்பட்டதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ செலவுக் கணக்கை தாக்கல் செய்துள்ளது. பில் தொகையில் ரூ. 6 கோடி வரை அதிமுக கட்டியுள்ளது. நிலுவைத் தொகை ரூ. 45 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.