60 முதல் 120 நாளில் கொரோனா தடுப்பூசி.. தினம் 10 லட்சம் பேருக்கு செலுத்தலாம்.. அப்பல்லோ அறிவிப்பு
சென்னை: ஒரு நாளைக்கு 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு அப்பல்லோ மருத்துவமனை தயார் நிலையில் இருப்பதாக அந்த மருத்துவமனையின் நிர்வாக துணைத் தலைவர் ஷோபனா காமினேனி தெரிவித்துள்ளார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களிடமிருந்து, கொரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவுக்கு வந்து விடும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருந்தார்.
தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை இந்தியா வந்து அடைந்தாலும், அதை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்ப்பது எவ்வாறு என்ற கேள்வி இன்னமும் பலரால் எழுப்பப்பட்டு வருகிறது.
கொரோனாவால் அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்!
தினமும் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று தனது செய்தியாளர் சந்திப்பில் சில நம்பிக்கை தகவல்களை அளித்துள்ளது. ஆன்லைன் மூலமாக செய்தியாளர்களை சந்தித்தார் அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் நிர்வாக துணைத் தலைவர் ஷோபனா காமினேனி. அப்போது அவர் கூறியதாவது: இன்னும் 60 முதல் 120 நாட்களுக்குள், கொரோனா தடுப்பூசி இந்தியா வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தடுப்பூசிகளை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கு தேவைப்படும் வசதிகளை அப்பல்லோ குழுமம் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பேருக்கு எங்கள் குழுமத்தால் தடுப்பூசி செலுத்த முடியும்.
தடுப்பூசி பணிகள்
நாடு முழுவதும் எங்கள் குழுமத்திற்கு சொந்தமான மருத்துவமனைகள், கிளினிக்குகள், மெடிக்கல் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு உரிய பயிற்சி அளித்துள்ளோம். தடுப்பூசி வழங்கும் பணியில் எங்கள் குழுமத்தை சேர்ந்த சுமார் 10,000 நிபுணர்கள் ஈடுபடுவார்கள். இந்தியாவைச் சேர்ந்த 30 சதவீதம் மக்கள் அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் ஏதாவது ஒரு மருத்துவ சங்கிலியில் இருந்து வெறும் 30 நிமிட தூரத்தில் தான் வசிக்கிறார்கள். எனவே அவர்களால் எளிதாக அப்பல்லோ மருத்துவமனை அல்லது மருந்தகங்களை அணுக முடியும். அதன் வழியாக எங்களது மருத்துவத் துறை நிபுணர்கள், தேவையான தடுப்பு மருந்துகளை வழங்குவார்கள்.
பராமரிப்பு வசதிகள்
தடுப்பூசிகளை உரிய வெப்பநிலையில் பாதுகாத்து வைக்கவும், அதை பாதுகாப்பான முறையில் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லவும் தேவையான மிகப் பெரிய நெட்வொர்க் வசதி எங்களிடம் இருக்கிறது. நாட்டின் மூலை முடுக்கு எந்த பகுதியாக இருந்தாலும் இரண்டு நாட்களுக்குள் தடுப்பு மருந்து கொண்டு சென்று சேர்த்து விடுவோம்.
அப்பல்லோ நெட்வொர்க்
அனைத்து அரசுகள், அரசு ஏஜென்சிகள், சுகாதார நெட்வொர்க்குகள் உள்ளிட்டவற்றுடன் இணைந்து அப்பல்லோ குழுமம் பொதுமக்களுக்கு தேவையான கொரோனா நோய் தடுப்பூசிகளை உரிய வகையில் கொண்டு சென்று சேர்க்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்பல்லோ மருத்துவமனை குழுமத்திற்கு நாடு முழுக்க 70 மருத்துவமனைகள், 400க்கும் மேற்பட்ட கிளினிக்குகள், 500 கார்ப்பரேட் ஹெல்த் மையங்கள், 4000 மருந்தகங்கள் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது.