நள்ளிரவு நேரம்.. கடவுளாய் வந்த காக்கிச் சட்டை... கர்ப்பிணியை காத்த காவலருக்கு குவியும் பாராட்டு
சென்னை: சென்னை நம்மாழ்வார்பேட்டையில் பிரசவ வலியிலும் உதவிக்கு எவரும் இன்றியும் துடித்த கர்ப்பிணிப் பெண்ணை காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்று காத்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சென்னை கொன்னூர் நெடுஞ்சாலையில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் காவலர்கள், செல்வராஜ், ராஜசேகர் ஆகியோர் நள்ளிரவு 2.30 மணியளவில் காவல் வாகனத்தில் ரோந்துப் பணி மேற்கொண்டிருந்தனர்.
அப்போது நம்மாழ்வார்பேட்டையில் உள்ள கே.எச் சாலை அருகே சாலையோரமாக தவிப்புடனும், கண்ணீருடனும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த பெண்ணின் அருகே வாகனத்தை நிறுத்தி அவர்கள் விசாரித்தனர்.
பிரசவ வலி
அப்போது அந்தப் பெண் தனது மகளுக்கு தலைப் பிரசவம் என்றும், அவருக்கு பனிக்குடம் உடைந்து பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
உதவிக்கு வரவில்லை
ஆனால், நள்ளிரவு நேரத்தில் எவரும் உதவிக்கு வரவில்லை என்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தும் அவர்களால் விரைந்து வரமுடியவில்லை என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி
இதையடுத்து அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான குழுவினர் கர்ப்பிணிப் பெண்ணான ஷீலாவை (30) காவல் துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று 108 ஆம்புலன்ஸ் வாகனம் நின்ற இடத்தில் சேர்த்தனர்.
நன்றியும், பாராட்டும்
அதனைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்தப் பெண்ணுக்கு அதிகாலை 3.15 மணியளவில் பெண் குழந்தை பிறந்தது. உரிய நேரத்தில் உதவி செய்த போலீசாருக்கு அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் கண்ணீருடன் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.