சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

''தினகரனை தலைவராக ஏற்க முடியலை.. வெளியேறிட்டேன்''- மகிளா காங். அப்சரா ரெட்டி பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா மீது தான் வைத்திருக்கும் மரியாதையும், பாசமும் தொடரும் என்றும், அவருடன் அரசியல் ரீதியாக இனி இணைந்து செயல்பட வாய்ப்பில்லை எனவும் மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்சரா ரெட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் விவரம் பின்வருமாறு;

கேள்வி: காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் உங்களை காணமுடியவில்லை..கட்சியில் இருக்கிறீர்களா?

apsara reddy interview about her political plans anad party activities

பதில்: காங்கிரஸில் தான் இருக்கிறேன், மக்களவை தேர்தலின் போது பல மாநிலங்களில் பிரச்சாரம் செய்திருக்கிறேன். மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியுள்ளேன், ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். இதனிடையே எனது அப்பா இறந்துவிட்டதால் ஒரு மாத காலம் நான் எந்தக் கட்சிப்பணிகளிலும் கலந்துகொள்ளவில்லை. மற்றபடி நான் தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

கேள்வி: காங்கிரஸ் கட்சிக்கு இது சோதனையான காலம் என்று சொல்லலாம்.. இந்த நேரத்தில் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் நீங்கள் ஈடுபடவில்லையே?

பதில்: தேர்தலின் போது பாஜக அளித்த வாக்குறுதியை நம்பி வாக்களித்து தமிழகத்தை தவிர மற்ற மாநில மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தலை சிறந்த தலைவர்கள் உள்ள நூற்றாண்டு கால பேரியக்கம். ஆகையால் மக்கள் மனதை கவர்ந்து மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை. அனைத்து மாநிலங்களிலும் பெண்களை அதிகளவு காங்கிரஸ் கட்சியில் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

apsara reddy interview about her political plans anad party activities

கேள்வி: குஷ்பூவுக்கும் உங்களுக்கும் மனவருத்தம் உள்ளதாக கூறப்படுகிறதே..?

பதில்: நிச்சயம் இல்லை, அவர் எங்கள் குடும்ப நண்பர். எனது தாயார் மீது குஷ்பூ அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார். பாஜகவில் நான் சேர்ந்த போது மட்டும் என்னிடம் குஷ்பூ கோபித்துக்கொண்டார்.

கேள்வி: பாஜக, அதிமுக, காங்கிரஸ் என 3 கட்சி மாறியிருக்கிறீர்கள்...ஏன்?

பதில்: ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும், பாஜக சார்பில் மகளிர் தின விழா விருது எனக்கு வழங்கப்பட்டது. அப்போது முரளிதரராவ் அவர்களும், தமிழிசை அக்கா அவர்களும் என்னிடம் ஏன் நீங்கள் பாஜகவில் இணையக் கூடாது எனக் கேட்டார்கள்..இணையலாம் என்று சொல்லி இரண்டு வாரங்கள் மட்டுமே பாஜகவில் இருந்தேன். உறுப்பினர் அட்டை கூட வாங்கவில்லை. அந்தக் கட்சியின் கொள்கைகள் பிடிக்காததால் உடனடியாக வெளியேறிவிட்டேன்.

அதிமுகவை பொறுத்தவரை அம்மா எனக்கு தேசிய ஊடகங்களுக்கான செய்தித் தொடர்பாளராக நியமித்தார்கள். அவர் மறைவுக்கு பிறகும் சின்னம்மாவுக்கு ஆதரவு அளித்து அதிமுகவில் தொடர்ந்தேன். ஆனால் அவர் டிடிவி தினகரனிடம் பொறுப்பைக் கொடுத்தது தவறு, அவரை தலைவராக ஏற்க முடியாததால் நான் அதிமுகவை விட்டு வெளியேறினேன். இந்நிலையில் மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் எம்.பி. அவர்கள் காங்கிரஸில் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்தார். சோனியாகாந்தி ஒரு பெண்ணாக இருந்து, தனக்கு நேர்ந்த அவமானங்களையும், பழிச்சொற்களையும் தாண்டி இந்தளவுக்கு கட்சியை வழிநடத்தியது என்னை கவர்ந்தது.

கேள்வி: டிடிவி தினகரன் மீது அப்படி என்ன உங்களுக்கு கோபம்?

பதில்: ஒரு தலைமைப் பொறுப்பை ஏற்பவர் என்ன பேசவேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதை கூட அறியாதவர். அனைவரையும் கிண்டல் செய்வது, 420 , டுபாக்கூர், ஆமை மண்டை என்பன போன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்துவது வழக்கம். இதெல்லாம் ஒரு தலைவர் உச்சரிக்கும் வார்த்தைகளா. கட்சியில் பொறுப்பு கிடைத்தவுடன் முதல்வர் பதவிக்கு தினகரன் ஆசைப்பட்டார். இப்படி பல காரணங்களை கூறலாம்.

கேள்வி: சசிகலா விடுதலையான பிறகு உங்கள் அரசியல் பயணம் திசை திரும்ப வாய்ப்புள்ளதா?

பதில்: இல்லை, காங்கிரஸ் கட்சி தான் இனி எனது எதிர்காலம். சின்னம்மா மீது வைத்திருக்கும் மரியாதையும், பாசமும் தொடரும், ஆனால் அவருடன் அரசியல் ரீதியாக இனி இணைந்து செயல்பட வாய்ப்பில்ல.

கேள்வி: காங்கிரஸில் இணைந்து 3 மாதம் கூட ஆகாத நிலையில் தேர்தலில் போட்டியிட நீங்க சீட் கேட்டீர்கள்..இது உங்களுக்கே நியாயமாக தெரிந்ததா?

பதில்: யார் அரசியலுக்கு வந்தாலும், வந்த இடத்திலேயே உட்கார வேண்டும் என நினைக்கமாட்டார்கள். எல்லா அரசியல்வாதிகளுக்கும் அடுத்தக் கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எனக்கும் அந்த எண்ணம் இருக்கிறது. எனக்கு இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த இன்னும் பல வாய்ப்புகள் தேவை. நிச்சயம் என்னை தேர்தல் களத்தில் காண்பீர்கள்.

கேள்வி: தேர்தலில் போட்டியிட வேண்டும் என நினைக்கிறீர்கள், ஆனால் அதற்கான களப்பணியை தொடங்கியது போல் தெரியவில்லையே?

பதில்: திருவள்ளூர் மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். ஏழைக்குழந்தைகளுக்கு கல்விச் செலவு உள்ளிட்ட பல சமுக நல பணிகளை செய்துகொண்டு தான் இருக்கிறேன். இனி திருவள்ளூர் மாவட்டத்தில் அடிக்கடி என்னை பார்க்க முடியும்.

English summary
mahila congress general secretary apsara reddy interview about to explain why her choose to congress party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X