"தம்"முக்கு தடை விதித்தவர்.. விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தவர்.. மறக்க முடியாத ஏ.ஆர் லட்சுமணன்
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய ஏஆர் லட்சுமணன் காலமானார்
சென்னை: "நீங்க நல்லா இருக்கீங்களா, நான் ரொம்ப நல்லா இருக்கேன்" என்று மறைந்த கருணாநிதி மீது இறுதி வரை தன் பாசத்தை பொழிந்தவர் மறைந்த நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன்.. அவரது நீதித்துறையில் செய்த சாதனைகள் அளப்பரியது.. காலத்துக்கும் மறக்க முடியாதது!
ஒருமுறை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்க சுப்ரீம் கோர்ட் முன்வந்தது... அப்போது தமிழகத்தில் திமுக அரசு நடந்து கொண்டிருந்தது.
தமிழக அரசிடம் இந்த குழுவில் யாரை நியமிக்கலாம் என்று கேட்ட போது முதல்வராக இருந்த கருணாநிதி, டக்கென சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏஆர்.லட்சுமணனைதான் அக்குழுவில் இடம்பெற செய்தார்.
நீதிமன்றத்தின் நெடுந்தூண் சாய்ந்ததே - ஏ.ஆர் லட்சுமணன் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்
ஏஆர் லட்சுமணன்
இதற்கு பிறகு சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ஏஎஸ் ஆனந்த் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டதுமே, ஏஆர் லட்சுமணன் தமிழக அரசின் பிரதிநிதியாக அக்குழுவில் இடம்பெற்றார்... அணையை ஆய்வு செய்வதற்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் 2 பேர் தேவை என ஆலோசனை சொன்னது தமிழக பிரதிநிதியான நீதியரசர் ஏஆர் லட்சுமணன் தான்.
சுப்ரீம் கோர்ட்
அதன் பிறகுதான், தொழில் நுட்ப வல்லுநர்களான சிடி தத்தா, டிகே மேத்தா 2 பேரும் ஆனந்த் குழுவில் இடம் பெற்று, ஒரு அறிக்கை தயாராகிறது.. ஆனந்த் குழுவின் அந்த அறிக்கையால்தான் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று உறுதியான தீர்ப்பை தந்ததுடன், தமிழகம் கோரியபடி 142 அடிக்கு நீரை தேக்கி வைக்க அனுமதித்தது.
வாழ்வாதாரம்
இப்படி, 5 மாவட்ட வாழ்வாதாரத்தை காத்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புக்கு காரணமாக இருந்த தமிழக பிரதிநிதி நீதியரசர் ஏஆர் லட்சுமணன்தான்.. இதற்கு மூலகாரணமாக இருந்தது மறைந்த கருணாநிதிதான்.. தனிப்பட்ட முறையில் கருணாநிதி மீது அளவுகடந்த பாசத்தையும் மரியாதையையும் வைத்திருந்தவர் லட்சுமணன். கருணாநிதியின் எழுத்து என்றால் இவருக்கு ரொம்ப பிரியம்.. ஒவ்வொரு முறையும் இவர்கள் நேரில் சந்தித்தால் பரஸ்பர நலன் விசாரிப்புடன் முடியாது.. அங்கே இருவருக்கும் ஆழமான ஒரு ஸ்நேகம் தென்படுவதை சுற்றியிருப்பவர்களால் உணர முடியும்!
மிரட்டல்
ஒருமுறை உபி முதல்வர் முலாயம் சிங் யாதவ் தொடர்பான வழக்கை லட்சுமணன் விசாரித்து கொண்டிருந்தார்.. அப்போது அவருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.. அந்த கடிதம் குறித்து கோர்ட்டில் லட்சுமணன் கதறி அழுதார்.. வழக்கை தொடர்ந்து விசாரிக்க விரும்பவில்லை என்று கூறி அதிலிருந்தும் விலகினார்.
விரும்பவில்லை
ஒரு நீதிபதிக்கு மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்டது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. லட்சுமணனுக்கு பிரிவு உபச்சார விழா நடந்தபோதுகூட, இந்த விஷயத்தை வழக்கறிஞர்கள் கேட்டனர்.. "இப்பவாவது சொல்லுங்களேன், அந்த மிரட்டல் கடிதம் யார் அனுப்பினாங்க.. என்ன எழுதப்பட்டிருந்தது" என்று கேட்டனர்.. ஆனால், அதை பற்றி நான் பேச விரும்பவில்லை" என்று சொல்லி, கடைசிவரை அந்த கடிதம் பற்றி சொல்லாமலேயே இருந்துவிட்டார் லட்சுமணன்.
வழக்குகள்
சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் இரண்டிலுமே ஸ்பெஷல் வாதங்களை எடுத்து வைப்பர் லட்சுமணன்.. தமிழக அரசு வக்கீலாகவும் இவர் பணிபுரிந்தார்.. நிறைய வங்கிகள், நிறுவனங்களுக்கு லீகல் அட்வைசராகவும் இருந்தார்... சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி தருவதற்காக சீனியர் வக்கீலாக தமிழகம் தேர்வு செய்தது லட்சுமணனைதான்!
அறிக்கைகள்
இன்னொரு சாதனை என்று பார்த்தால், 2 வருட பதவிக் காலத்தில் - "33 'சட்ட கமிஷன் அறிக்கைகளை' மத்திய அரசுக்கு அளித்த ஒரே ஆணைய தலைவர் என்ற சாதனையை ஆணைய வரலாற்றில் தோற்றுவித்தது இவர்தான். அதுமட்டுமல்ல, சென்னையில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரைமுறைப்படுத்துவது குறித்து பரிந்துரைக்கும் குழுவிற்கு தலைவராகவும் அரசு நியமித்தது இவரைதான்!
பரிந்துரைகள்
பெண்களுக்கு சம சொத்துரிமை வழங்கும் இந்து வாரிசுரிமை சட்டத்திலும் சரி, இந்திய வாரிசுரிமைச் சட்டத்திலும் சரி, எத்தனையோ திருத்தங்களை கொண்டு வர பல்வேறு பரிந்துரைகளை செய்து கொண்டே இருந்தவர் மறைந்த லட்சுமணன்!
ஆசிட் வீச்சு
ஒரு காலத்தில் கல்லூரி பெண்கள் மீது ஆசிட் ஊற்றும் கலாச்சாரம் பெருகி கிடந்தது.. காதலில் தோற்ற ஆண்கள், ஒருதலை காதலில் விழுந்தோர் எல்லாம் இளம் பெண்களின் மீது ஆசிட்டை ஊற்றி, அதன்மூலம் உயிரிழப்புகள் தொடர்கதையாகி வந்தன.. இப்படி பெண்களின் மீது ஆசிட் வீசினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்து, அந்த தண்டனைக்கான திருத்தங்களை பரிந்துரைத்தவரும் லட்சுமணன்தான்.. அதற்குபிறகுதான் நாட்டில் ஆசிட் வீச்சு பலிகளுக்கு ஒரு அழுத்தமான முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
துணிச்சல்
இது எல்லாவற்றிற்கும் மேலாக, ஹிந்தியை கட்டாயமாக்கக் கூடாது என்று டெல்லியில் உட்கார்ந்து கொண்டு துணிச்சலாக அன்றே குரல் கொடுத்தவர் லட்சுமணன். இவர் ஒரு சிறந்த இலக்கியவாதி.. நிறைய நூல்களை எழுதியுள்ளார்.. மாணவர்களின் எதிர்காலம் குறித்த அக்கறையை அடிக்கடி பதிவு செய்து கொண்டே இருந்தவர்.. இவர் எழுதிய நூலை படித்தால், மிகச்சிறந்த இலக்கியங்களை படிப்பதுபோல ஒரு உணர்வு இருக்கும்.. அந்த புத்தகத்தில் நிறைய இடங்களில் திருக்குறளை சொல்வது இவரது ஸ்பெஷல்.
வாசிப்பு
தன்னுடைய புத்தக ஆர்வத்தை பற்றி ஒருமுறை லட்சுமணன் சொல்லும்போது, "தீர்ப்பு எழுதும் நேரம் தவிர, மத்த எல்லா நேரமும் படிச்சிட்டுதான் இருப்பேன்.. படிக்கிறது என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. முதலில் வாசிப்பு.. 2வதுதான் சுவாசம்... வாசிப்பது போலவே வாழ வேண்டும்" என்று சொன்னார்.
புகை பிடிக்ககூடாது
தேவக்கோட்டையில் ஒரு சாதாரண வக்கீலாக பணியை தொடங்கிய இவர், சென்னை ஹைகோர்ட், கேரளா ஹைகோர்ட் உட்பட, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றியவர்.. இவரது தீர்ப்பில் மிக முக்கியமாக கருதப்படுவது, பொது இடங்களில் புகைபிடிக்கக் கூடாது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புதான்.
பாராட்டுக்கள்
இவர் ரொம்பவும் கண்டிப்பானவர்... எந்தவித காம்ப்ரமைஸும் இவரிடம் எடுபடாது... அரசு அதிகாரிகளானாலும் சரி, தனியார் நிறுவன அதிகாரிகள் ஆனாலும் சரி.. குற்ற பின்னணி என்று வந்துவிட்டால் எந்த சமரசத்துக்கும் ஆளாக மாட்டார்... பல வழக்குகளில் இவரது கடுமையை பலர் பாராட்டவும் செய்தனர்.
சோகம்
கடந்த செவ்வாய்க்கிழமைதான் இவரது மனைவி கொரோனா தாக்கி இறந்தார்.. மனைவி இறந்ததில் இருந்தே கடுமையான மன அழுத்தத்தில் இருந்தாராம் லட்சுமணன்.. யாராலுமே அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்துள்ளனர்.. மனைவி இறந்ததில் இருந்தே சரியாக சாப்பிடவும் இல்லையாம்.. அதனாலேயே உடம்பு ரொம்ப மோசமாகிவிட்டதாக குடும்பத்தினர் சொல்கிறார்கள். இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்திருப்பது நமக்கு அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.
தீர்ப்புகள்
பொதுவாக, உலகில், சாதனைகளை நடத்தி காட்டுபவர், சாதனைகளை வேடிக்கை பார்ப்பவர் என்று 2 வகை உண்டு.. இதில் லட்சுமணன் முதல் வகையை சேர்ந்தவர்... தேவகோட்டையிலிருந்து செங்கோட்டை வரை இவரது புகழ் என்றும் ஓங்கி ஒலிக்கும்.. நீதித்துறையில் இவர் வழங்கிய தீர்ப்புகளை நாட்டு மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட மாட்டார்கள்!!