கவனித்து சொன்னாரா.. எதார்த்தமா.. ஏன் டிரம்பை ரஹ்மான் அப்படி வரவேற்றார்!
சென்னை: அஹமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்கிருந்த குறிப்பேட்டில், "இந்த அற்புதமான பயணத்திற்காக எனது சிறந்த நண்பர் மோடிக்கு நன்றி" என்று கூறியிருந்தார். அதில் காந்தியை பற்றி எதுவும் டிரம்ப் சொல்லாத நிலையில் காந்தியின் மண்ணிலிருந்து உங்களை வரவேற்கிறோம் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 'கூறியுள்ளார்.
Recommended Video
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இன்று காலை இந்தியாவின் அஹமதாபாத்திற்கு தனது மனைவி மற்றும் மகள் மற்றும் மருமகனுடன் வந்தார். அவரை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.
பின்னர் அங்கிருந்து சாலை மாக்கமாக சபர்மதி ஆசிரமத்திற்கு அதிபர் டிரம்ப் புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் வரையிலான 22 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து டிரம்புக்கு வரவேற்பு அளித்தார்கள். வழியில் 30-க்கும் மேற்பட்ட மேடைகள் அமைக்கப்பட்டு இந்தியாவின் கலாசாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது..
|
டிரம்ப் மரியாதை
இந்த பிரமாண்ட வரவேற்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்த டிரம்ப் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டங்களுக்கு காரணமான சபர்மதி ஆசிரமத்தை அடைந்தார். அங்கு டிரம்ப் மற்றும் மெலனியாவுக்கு கதர் துண்டு அணிவித்து மோடி வரவேற்றார். பின்னர் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்று ஆசிரமத்தை சுற்றிக் காண்பித்தார். ஆசிரமத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு டிரம்பும் மோடியும் மரியாதை செலுத்தினர்.
சுழற்றிய டிரம்ப்
ஆசிரமத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய ராட்டையை டிரம்ப் பார்வையிட்டார். அந்த ராட்டையில் நூல் நூற்பது குறித்து டிரம்பிடம் நிர்வாகிகள் விளக்கினார்கள். அதன்படி டிரம்பும் அவரது மனைவி மெலனியாவும் ராட்டையை சுழற்றி, நூல் நூற்க முயற்சி செய்தார்கள். பிரதமர் மோடி அவர்களுக்கு ராட்டையின் செயல்பாடு குறித்து விளக்கமும் அளித்தார்.
மோடிக்கு நன்றி
ஆசிரமத்தில் இருந்த 3 குரங்கு பொம்மைகளை டிரம்புக்கு காட்டி மோடி விளக்கினார். பின்னர் சபர்மதி ஆசிரமத்தை சுற்றி பார்த்துவிட்டு இறுதியில் அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் குறிப்பேட்டில், "இந்த அற்புதமான பயணத்திற்காக எனது சிறந்த நண்பர் மோடிக்கு நன்றி" என்று குறிப்பிட்டு டிரம்ப் கையெழுத்திட்டார். பின்னர் அங்கிருந்து நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்காக புறப்பட்டு சென்றார்.
காந்தியின் உணர்வு
அமெரிக்க அதிபர் டிரம்ப் மகாத்மா காந்தி குறித்து ஒரு வார்த்தை குறிப்பிடாத நிலையில் முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியா வந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா, காந்தி குறித்து எழுதிய வாசகம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. "காந்தியின் உணர்வு இந்தியாவில் இன்றும் உயிருடன் இருக்கிறது. எல்லா தேசங்கள் மற்றும் எல்லா மக்களிடையேயும் நாம் எப்போதும் அன்பு மற்றும் அமைதியின் உணர்வைப் பகிர்ந்துகொண்டு வாழ்வோம்" என எழுதியிருந்தார்.
ஏஆர் ரகுமான்
இந்நிலையில் அண்மைக்காலமாக சிஏஏ உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து வெளிப்படையாக பேசி வரும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், டிரம்ப் எதுவும் சொல்லாததை கவனித்து சொன்னாரா அல்லது எதார்த்தமாக நடந்ததாக என்பது தெரியவில்லை. ஏனெனில் காந்தியை பற்றி எதுவும் டிரம்ப் சொல்லாத நிலையில் காந்தியின் மண்ணிலிருந்து உங்களை வரவேற்கிறோம் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அஹிம்சை பாடலை பதிவிட்டுள்ளார்.
துன்பம் தரும்
அந்த பாடலும் சும்மா சாதாரண பாடல் இல்லை. திருவள்ளூவர் எழுதிய திருக்குறள். "செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும்" என்று முடிகிறது.இதன் அர்த்தம் என்னவென்றால், நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும் என்பதாகும்.